மாநாடு 18 June 2022
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள், கஞ்சா விற்பனை அதிகரிக்கிறது. இதனால் பல குற்றங்களும், சட்டம் ஒழுங்கு சீர் கேடுகளும் அதிகரித்து வருவதை செய்திகளின் வாயிலாக அனைவரும் அறிய முடிகிறது.
இதனை தடுக்கும் நோக்கில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சா ஆபரேஷன் 2.O என்கிற திட்டத்தை அமல்படுத்தினார். அதன்மூலம் பல இடங்களில் கஞ்சா விற்பவர்களை கைது செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் அருகே கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வந்ததையொட்டி காவலர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்கத் திட்டம் தீட்டி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாம்பரம சானிடோரியம் பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்பவனை கைது செய்திருக்கிறார்கள்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அலைபேசி மூலம் அருண் என்பவனை தொடர்புகொண்டு விற்பனைக்காக கஞ்சா கேட்டால் கொண்டு வந்து தன்னிடம் தருவதாகவும் ,அதனை இவன் படிக்கும் மாணவர்களுக்கு விற்பனை செய்ததாகவும் தெரிவித்திருக்கிறான்.
அவன் சொன்னது போலவே காவலர்கள் அருண் என்பவனிடம் தொடர்புகொண்டு அலைபேசியில் பேசி கஞ்சா வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். அருண், தினேஷ் என்பவனிடம் கஞ்சாவை கொடுத்து அனுப்பி இருக்கிறான் .மறைந்திருந்த காவலர்கள் கஞ்சா கொண்டு வந்த தினேஷ் என்பவனை பிடித்து கைது செய்திருக்கிறார்கள். அவனிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். பல்லாவரம் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் தயாள் இவர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்து இருக்கிறார்.
மேலும் கஞ்சா வியாபாரியான அருணை தீவிரமாக தேடி வருவதாக கூறுகிறார்கள் ,இந்நிலையில் மாணவர்களை அழிவுப்பாதையில் இழுத்துச்செல்லும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தினேஷ் என்பவன் திமுகவின் இளைஞரணி செயலாளர் ,நடிகர் உதயநிதி ஸ்டாலினின் பல்லாவரம் நகர உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற செயலாளர் என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகிய போது திரையரங்குகளில் பெரிய பெரிய பதாகைகளும் பல இடங்களில் சுவரொட்டிகளும் தனது படத்தையும் தனது தலைவன் உதயநிதி படத்தையும் போட்டு ஒட்டி கஞ்சா விற்ற காசில் கலக்கியிருக்கிறான் கஞ்சா வியாபாரி தினேஷ். அந்த சுவரொட்டிகளும் பதாகைகளும் இப்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.