மாநாடு 20 December 20222
கேரள மாநிலம் ஆலப்புழாவில் டிசம்பர் 16ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த ஏ ஐ டி யூ சி 42வது அகில இந்திய மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் தேசிய குழு உறுப்பினர்களாக 354 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 54 நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்,
தலைவராக ரமேந்திர குமார்(பீகார்), பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர்(பஞ்சாப்), செயல் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பினாய்விஸ்வம் (கேரளா) ஆகியோரும், தமிழகத்திலிருந்து துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், செயலாளர்களாக டி.எம். மூர்த்தி, வகிதாநிஜாம் ஆகியோரும், தேசிய நிர்வாக குழு உறுப்பினர்களாக எஸ் .காசிவிஸ்வநாதன், எம். ராதாகிருஷ்ணன், கே.இரவி, சி.சந்திரகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில் அணு ஆயுத அச்சுறுத்தலும், சுற்று சூழல் பாதிப்பும் உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மக்களை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்த சர்வதேச நாடுகள் கூடி எந்தவித ஆக்கபூர்வ முடிவுகளும் எடுக்காமல் வேறுபாடுகளோடு முடிந்து விடுகிறது. உக்ரைன், ரஷ்யா விற்கிடையே நடைபெறுகின்ற போர் இதனை கூர்மையுடன் எச்சரிக்கிறது. எனவே உலக நாடுகள் இதில் உரிய கவனம் செலுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான, அவசர நடவடிக்கையாக கருத்தொற்றுமை ஏற்படுத்தி உரிய செயல் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்திட கேட்டுக்கொள்கிறோம்,
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் கிராமப்புற ஏழை, எளிய. மக்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகரமான வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய சிறப்பான திட்டமாகும். இதனை முறையாக செயல்படுத்திடாமல் நீர்த்து போகச் செய்து தோல்வியுறச் செய்யும் நடவடிக்கைகளில் பல்வேறு சக்திகள் ஈடுபட்டுவருகின்றன. இதற்கு இடமளிக்காமல் இந்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யவும், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையை உறுதிப்படுத்தி வழங்கிடவும், நாள் ஒன்றுக்கு ரூ700 கூலியாக உயர்த்தி வழங்கிடவும் ஒன்றிய அரசை அகில இந்திய மாநாடு வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் 42 வது ஏஐடியூசி அகில இந்திய மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.