மாநாடு 29 May 2022
தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை தொடங்கிவிட்டார்கள். அரசு பள்ளிகளில் தாமதப்படுத்துவது பெற்றோர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது இதனால் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறையும் அபாயம் உள்ளது என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பிகே.இளமாறன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதில் கூறியிருப்பதாவது :
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினைத் தொடங்கிவிட்டார்கள். கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய, வாழ்வாதாரம் குன்றிய மற்றும் தூய்மைப்பணியாளர்கள் குடும்பங்களின் குழந்தைகள் சேர்க்கைக்கான தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கைக்காக மாநிலம் முழுதும் உள்ள தனியார் பள்ளிகளில் மே 30ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு தொடங்கவுள்ளது.எதிர்காலத்தில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முறையாக சேர்க்கப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்கவேண்டுமே தவிர, அரசே தேர்வு செய்து தருவதைத் தவிர்க்கவேண்டும். இதன் மூலம் அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் சிறப்பு என்பதை அரசே உறுதிசெய்வதுபோல் உள்ளது.
இந்நிலையில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப்பற்றி அறிவிப்பு இன்னும் வராததால் பெற்றோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் அச்சம் ஏற்படுகிறது. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை ஜூன் முதல் தேதியே தொடங்கிடவும், எதிர்வரும் காலத்தில் அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கும் மாணவர் சேர்க்கையினை ஒரே நாளில் தொடங்க ஆவன செய்யும்படி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன். என்று கூறியுள்ளார்.