மாநாடு 16 May 2025
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்எல்ஏவும், தற்போது அமமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கின்ற எம்.ரெங்கசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் தறையினர் இன்று காலை 7 மணியிலிருந்து சோதனை நடத்தினர் அதன் விவரம் பின்வருமாறு ;
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை, பூண்டி அருகேயுள்ள மலையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம். ரெங்கசாமி. இவர் தற்போது தஞ்சாவூர் அருகே தளவாய்ப்பாளையம் வீரையன் நகரில் வசித்து வருகிறார். அதிமுகவில் இருந்த இவர் தஞ்சாவூரில் 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக ஆனார்.
அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற இவர் டி.டி.வி. தினகரன் அணிக்கு சென்றார். அதன் பிறகு தகுதி இழப்புக்கு உள்ளான 18 எம்.எல்.ஏ.க்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது . இதையடுத்து அமமுகவில் துணைப் பொதுச் செயலாளரானார். இவர் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் இருந்து வந்தன.
இந்நிலையில் தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். அன்பரசன் தலைமையில் 10 காவல் அலுவலர்கள், காவலர்கள் என ரங்கசாமி வீட்டில் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இச்சோதனை முடிவுக்குப் பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும் என கூறப்படுகிறது.