Spread the love

மாநாடு 26 May 2025

நேற்று மாலை தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றியும், மரியாதையும் செலுத்தும் வகையில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் தஞ்சையில் நடந்தது.  ஊர்வலத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பா.ஜனதா மூத்த தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான எச்.ராஜா கலந்து கொண்டார்.

தப்பாட்டத்துடன் இந்த ஊர்வலம் காந்திஜி சாலை வழியாக சென்று பழைய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் விநாயகம், முரளிதரன், அம்ரீத்அரசன், நெப்போலியன் பொதுச்செயலாளர் வீரசிங்கம், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மருத்துவப்பிரிவு மாநில செயலாளர் பாரதிமோகன், மாவட்ட செயலாளர் புண்ணியமூர்த்தி, நெசவாளர் பிரிவு மாநில துணைத் தலைவர் உமாபதி மற்றும் பலர் கலந்து கொண்டு கையில் தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

முன்னதாக எச்.ராஜா நிருபர்களிடம் கூறும்போது, ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் தனது வெளிநாட்டு பயணத்தை பாதியிலே ரத்து செய்துவிட்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, இதற்கு காரணமானவர்கள், பின்னணியில் இருப்பவர்கள் அனைவரும் தேடி பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என சொன்னார். அதன்படி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றது.
பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்பட எல்லா வகையிலும் மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை மக்களிடம் எடுத்து கூறும் வகையிலும், ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் வகையிலும் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நடக்கிறது. தமிழ்நாட்டில் பாகிஸ்தானுக்கு கூஜா தூக்கக்கூடியவர்கள் இன்னும் இருக்கிறார்கள். டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை தான் சுப்ரீம்கோர்ட்டு விதித்து இருக்கிறது. இதை நினைத்து உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் அடக்கி பேச வேண்டும். இல்லையென்றால் விலை கொடுக்க வேண்டியது இருக்கும். கல்வித்துறைக்கு 20 திட்டத்தின் கீழ் நிதி கொடுக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஒன்று புதிய கல்விக் கொள்கை. இந்த திட்டத்தை தமிழகஅரசு நடைமுறைப் படுத்தாததால் நிதி கொடுக்கப்படவில்லை. மொழிப்பிரச்சினையை கிளப்பி இனியும் உருட்டிக் கொண்டு இருக்க வேண்டாம். கொஞ்சம் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றார். பின்னர் தஞ்சை கிரேசி மகாலில் மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் பிறந்த நாள் விழாவும் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டமும் நடந்தது.

செய்தி – N.செந்தில் குமார்

80690cookie-checkதஞ்சையில் பாஜக சார்பில் ஊர்வலம் எச்.ராஜா பங்கேற்பு

Leave a Reply

error: Content is protected !!