மாநாடு 28 May 2025
கோவை கந்தே கவுண்டன் சாவடி மற்றும் பொள்ளாச்சி கோபாலபுரம் ஆகிய இரு போக்குவரத்துத்துறை (RTO) சோதனைச் சாவடிகளில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் 2,13,640 ரூபாய் பறிமுதல் செய்து அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
இந்த சோதனையின் போது கந்தே கவுண்டன் சோதனைச் சாவடியில் 1,47,560 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 1 லட்சம் ரூபாய் சேமிப்பு அறையில் இருந்த பிரிண்டருக்குள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.
மேஜைகளில் 17,060 ரூபாய் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அங்கு இருந்த ரேக்குகளில் 30,500 ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த சதீஷ் ஜெயச்சந்திரன் ,உதவியாளர் லோகநாதன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனை சாவடியில் 66,080 ரூபாய் பறிமுதல் செய்து அங்கு பணியில் இருந்த தமிழ்ச்செல்வி மற்றும் சிவகுரு ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் போக்குவரத்துத் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.