மாநாடு 31 May 2025
தமிழ்நாட்டில் பல நகரங்களும் நாறி கிடப்பதற்கு முதன்மையான காரணமே நகரமைப்பு அலுவலர்கள் தான் என்பது சமூகத்தின் மீது அக்கறை கொண்டு ஆய்ந்து சிந்தித்தால் அனைவருமே அறியலாம். ஏனெனில் எந்த கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றாலும், வீடுகள், கடைகள் கட்ட வேண்டும் என்றாலும், மேலும் பல வகைகளிலும் நகரத்தின் வடிவமைப்புக்கு வழிவகைகள் செய்து தருவது நகரமைப்பு அலுவலர்கள் தான் அதேபோல வருவதை வாங்கிக் கொண்டு எங்கு சாக்கடை ஓடினால் என்ன?
சாலைகளில் மகளிர்கள், முதியவர்கள் , இளையவர்கள் வரை நடந்து செல்ல முடியாத அளவிற்கு நெருக்கடி இருந்தால் நமக்கென்ன? வாகனங்களில் செல்பவர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியாத வகையில் சாலைகள் நெருக்கடியாக இருந்தாலும் நமக்கு கவலை இல்லை
இங்கு முடிந்தவரை இருந்து சம்பாதிப்போம் இங்கிருந்து எங்கு சென்றாலும் இதே போல வேலையை செய்து துட்டு சம்பாதிப்பதையே தன் வாழ்நாளின் லட்சியம் என்று வாழும், வாழ்ந்த பல அதிகாரிகளாலும் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதிலும் பெரும்பாலும் நகர் அமைப்பு அதிகாரிகளாலேயே எவ்வளவுதான் ஊரை நேசித்து வாழும் சமூக ஆர்வலராக இருந்தாலும் கூட இந்த ஊர் எங்கள் ஊர் , சுத்தமான ஊர், சுகாதாரமான ஊர், நேர்த்தியான ஊர், நேர்மையான அதிகாரிகள் மற்றும் மக்களின் மீது நேசம் கொண்ட அரசியல்வாதிகளால் எங்கள் ஊர் இவ்வளவு எழில் மிகு அழகாக இருக்கிறது என்று சொல்லி பெருமையாக மார்தட்டி கொள்ள முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் பல ஊர்கள் இருப்பது போலவே…
எழில்மிகு நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பலநூறு கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தாலும் கூட முன்பு இருந்ததை விடவும் மோசமானதாக, நெருக்கடி மிகுந்ததாக அதுவும் சமீப காலத்தில் மிக மோசமாக தஞ்சாவூர் மாநகராட்சி மாறி வருகிறது என்பதற்கு பல காட்சிகளே சாட்சிகளாக இருக்கிறது.
ரோட்டில் ஓடும் சாக்கடைகளுக்கும், மக்கள் நடக்க வேண்டிய நடைமேடை பாதைகளில் எல்லாம் ஆக்கிரமிப்பு கடைகளும் , நேர்த்தியான சாலைகளில் கூட நேராக செல்ல முடியாத அளவிற்கு நெருக்கடியாக இருக்க கூடிய, விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களும் நிரம்பி நகராட்சியாக இருந்தபோது சூப்பராக இருந்த தஞ்சாவூர்! ஸ்மார்ட் சிட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு சுமாரான சிட்டியாக தஞ்சாவூர் மாறி இருக்கிறது என்பதே சமூக ஆர்வலர்களின் கூற்று.
விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் எதுவாக இருந்தாலும் ஆலயங்கள் உட்பட பள்ளிகளாக இருந்தாலும் கூட இடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்ற போதும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவையே துச்சம் என்று தூக்கி எறிவதற்கான அத்தனை தகிடதத்த வித்தைகளையும் கற்றவர்கள் நாங்கள் என்று காட்டி நித்தமும் சட்டப்படி செய்ய வேண்டிய முழுமையான வேலைகளை செய்யாமல் சத்தம் இல்லாமல் சம்பாதிப்பதற்கு உண்டான வேலைகளை செய்யும் பல அதிகாரிகள் இருக்க தான் செய்கிறார்கள் தஞ்சாவூரிலும்..
தஞ்சாவூரில் விதி மீறிய கட்டிடங்களை இடிக்கச் சொல்லி, குறிப்பிட்டு இந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட பல தனியார் முதலாளிகளிடம் தங்களுக்கு செய்ய வேண்டியதை செய்யச் சொல்லி வாங்கிக்கொண்டு இடிக்காமல் வேடிக்கை பார்த்து காலம் தாழ்த்தி காப்பாற்றும் வேளையில் கப்பம் கட்டியவர்களுக்கு உண்மையாக இருந்தார்கள் தஞ்சாவூர் மாநகராட்சியினர் என்கிற செவி வழி செய்தியும் வருகிறது, விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நிதிப் பெறாமல் அனுமதி கொடுத்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிற போது நீதிமன்றம் இடிக்கச் சொல்லிக் கொடுக்கும் உத்தரவை நிறைவேற்றாமல் விதி மீறிய கட்டிடத்தின் சொந்தக்காரர்கள் சதி வேலை செய்தாவது சொத்தை காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கின்ற வேளையில்
படக்கென்று மக்களுக்காக வேலையை முடிக்காமல் அவர்கள் பொறுமையாக நீதிமன்றம் வரை சென்று தடை ஆணை, தற்காலிக தடை ஆணை வாங்கும் வரை தனக்கான வேலையை பார்க்காமல் வேடிக்கைகள் பார்த்துக் கொண்டிருந்ததில் தஞ்சாவூர் மாநகராட்சியினரின் பங்கு அலாதி.
மேலும் தற்போது வரை தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பல வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்படாமல் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இவ்வாறான வருவாய் இழப்பிற்கு காரணமாக அமைந்ததும் இது போன்ற பொறுப்பற்ற அதிகாரிகள் தான் என்பது கசப்பான உண்மை. கீழவாசல் சரபோஜி மார்க்கெட் வணிக வளாகங்களில் முறையாக வாடகைக்கு ஏலம் விட்ட கடைகளை விட தனக்கான வருமானம் பார்ப்பதற்காக தஞ்சாவூர் மாநகராட்சியின் ஒப்பந்த, தற்காலிக ஊழியர்களை வைத்து வசூல் செய்து கொண்டு முறைகேடாக மாடிப்படிகளை ஒட்டிய இடங்களையும், பாதைகளையும் மறைத்து, ஆக்கிரமித்து கடைகள் அமைக்க மறைமுக துணையாக இருந்து வசூல் வேட்டையில் இறங்கி கம்மென கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்களாம் தஞ்சாவூர் மாநகராட்சி நகர அமைப்பு அலுவலர் முரளியும் , இந்தப் பகுதியின் வருவாய் ஆய்வாளர் திருமுருகனும், அது மட்டுமல்லாமல் முறையாக ஏலம் விடப்படாத பல கடைகளையும், மாநகராட்சியிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட கடைகளையும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் பூட்டி சாவியை வைத்துக் கொள்ளாமல் ஆளாளுக்கு நாட்டாமை செய்கிற விதத்தில் ஈடுபட்டு பணம் பெற்று கொள்வதாகவும் அதனால் தான் பல கடைகள் பூட்டப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது அதன் வசூலையும் மேற்படியாளர்கள் தான் பெற்றுக்கொள்கிறார்களாம். இப்படி மாநகராட்சி நிர்வாகம் நடந்தால் மக்களின் வரிப்பணம் வீணாகும், அரசுக்கு நட்டம் மட்டுமல்லாமல் கெட்ட பெயரும் வரும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வணிக வளாகங்கள் முன்னேற்றம் அடைவதற்கு வாய்ப்பே இருக்காது மக்களின் நடமாட்டமும் நாளுக்கு நாள் குறைந்து தான் போகும்..
சரவணகுமார் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக இருந்தபோது பல எதிர்ப்புகளையும் சந்தித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாதனை படைத்த பல பகுதி இடங்களும், பேருந்து நிலையங்களும், பேருந்து நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளும் , நடைபாதை கடைகளால் நிரம்பி வழிகிறது இதற்கும் காரணமும் நிதிதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஒரு கடைக்கு இவ்வளவு என பெற்றுக் கொண்டு தரைக்கடை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அதனால் தான் மக்கள் நடக்க வேண்டிய இடங்களில் விதி மீறிய கடைகள் இருக்கிறது , வாகனங்கள் ஓட வேண்டிய சாலைகளில் மக்கள் நடை போடுகிறார்கள் இதனால் நாள்தோறும் விபத்துகளும் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது அதிலும் ஆனந்தம் சில்க்ஸ் கடைக்கு வெளியே அமைக்கப்பட்டு இருக்கும் டீக்கடை கூட ஆக்கிரமிப்பு இடம் தான் என்கிறார்கள் , அங்கு வருபவர்களும் காலையிலும் , மாலையிலும் அதிக அளவில் வாகனங்களை சாலை நடுவிலேயே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் ஏற்படுவதை டிபிஓ முரளி உட்பட பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதற்கு காரணம் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள் அதனால் தான் இதற்கெல்லாம் எந்த தீர்வும் எட்டப்படாமல் இருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்
இதையெல்லாம் சரி செய்ய வேண்டியவர் மாநகராட்சி ஆணையர் ஆனால் அவரோ இருக்கும் இடம் தெரியாமல் பத்திரிக்கையாளர்கள் போன் செய்தால் கூட அட்டென்ட் செய்யாமல் இருந்து வருகிறார். ஆணையரின் அதிகாரம் என்னவென்று தெரிந்து சாமானிய மக்களின் எதிர்கால நலனே முக்கியம் என்று அறிந்தவாக இனியாவது செயல்பட்டு டி பி ஓ முரளி, வருவாய் ஆய்வாளர் திருமுருகன் , சுகாதார ஆய்வாளர்கள் போன்றோர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? ஆக்கிரமிப்புகளை அகற்றுவாரா மாநகராட்சி ஆணையர் கண்ணன் ? அடுத்து பொதுமக்களின் பேட்டியோடு விரிவான செய்திகள் மாநாடுTVல்…