மாநாடு 02 June 2025
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் முதல் மாநில மாநாடு தஞ்சாவூரில் விவசாயிகள் கடன் விடுதலை மாநாடாக வரும் 3ம் தேதி நடக்கிறது என மாநிலத் தலைவர் பழனியப்பன் தெரிவித்தார்.
இது குறித்து தஞ்சாவூரில் நிருபர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கம் சார்பில் முதல் மாநில மாநாடு வரும் 3ஆம் தேதி தஞ்சாவூரில் நடக்கிறது. இந்த மாநாடு விவசாயிகளை கடன் சுமைகளிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி நடத்தப்படுகிறது. மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமையில் நடக்கும் விவசாயிகளின் பேரணியை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் இருந்து தஞ்சை சரக டிஐஜி ஜியாஉல்ஹக் துவக்கி வைக்கிறார்.
மாநாட்டில் தஞ்சை மாநகர தலைவர் புண்ணிய.காமராஜ் வரவேற்புரையாற்றுகிறார். மாநில பொருளாளர் வீரப்பன் சங்க கொடி ஏற்றுகிறார். பொதுச் செயலாளர் செந்தில்குமார் கண்காட்சி அரங்கத்தை திறந்து வைக்கிறார். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மணி தலைவர்களின் படத்தை திறந்து வைக்கிறார். தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழு தலைவரும் எம்எல்ஏவுமான வேல்முருகன், சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் பிரகாசன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில கவுரவ தலைவர் ராமதாசு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்த மாநாட்டில் வேளாண்துறை வல்லுநர்கள், பால்வளம், இயற்கை விவசாயம், தோட்டக்கலைத் துறையை சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று கருத்துரை வழங்குகின்றனர். மாநாட்டில் விவசாய விலைப் பொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளை கடன் சுமைகளிலிருந்து விடுவிக்க வேண்டும். விவசாயிகள் அடங்கிய குழுவை அமைத்து தூர் வாரும் பணிகளை கண்காணிக்காமல் விட்டுவிட்டதால் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. முறைகேடுகளுக்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூர்வாரும் பணியினை முறையாக செயல்படுத்த வேண்டும். வாய்க்கால்கள் தூர் வாரும்போது அதில் உள்ள மண்ணை கரையில் கொட்டி பலப்படுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தூர்வாரும் வாய்க்காலிலே கொட்டுவதால் எவ்வித பலனும் இல்லை. வேளாண் பொறியியல் துறையால் சி மற்றும் டி வாய்க்கால்களை அடுத்த ஆண்டு முதல் பிப்ரவரி மாதத்திலேயே தூர்வாரி முடிக்க வேண்டும். தற்போது மே மாதம் வரை இப்பணிகள் நடப்பதால் கோடை சாகுபடி விவசாயிகள் மேற்கொள்ள இயலாமல் போய் விடுகிறது. எனவே இதை முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளது.
இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது மாநிலத் துணைச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் வீரப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி – N.செந்தில்குமார்