மாநாடு 13 June 2025
மாநகராட்சியில் பணியாற்றும் சில பில் கலெக்டர்களின் சம்பளத்தையும் அவர்கள் வாங்கி குவித்திருக்கும் சொத்தின் விவரங்களையும் அறிந்து கொண்டாலே போதும் அவர்கள் கொஞ்சமும் அச்சப்படாமல் லஞ்சத்தில் மஞ்ச குளித்து இருப்பது தன்னாலே வெளிப்படும். அரசு பணியாளர்களுக்கு என்று விதிகள் இருக்கிறது அதன்படி பார்க்கிறபோது அரசு பணியாளர்கள் நன்னடத்தை விதிகள் 1973 என்று ஒன்று இருப்பதே சமூக அக்கறை உள்ள பலருக்கும் தெரிவதில்லை அதனால்தான் லஞ்சப் பெருச்சாளிகள் பெருகி கிடக்கிறார்கள் சமூகத்தில். ஒரு அரசு பணியாளர் சொத்துக்களை வாங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் இருக்கிறது தனது மேலதிகாரிக்கு தெரிவித்திருக்க வேண்டும் எந்த சொத்துக்கள் எவ்வளவு வாங்கி இருக்கிறோம் என்று பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும் அதனை பொதுமக்கள் தகவலாக கேட்கும் போது தர வேண்டும் ஆனால் சமூக ஆர்வலர்கள் கூட இதனை முழுவதுமாக பயன்படுத்தாமல் இருக்கும் காரணமே அவர்களின் பலமாக இருக்கிறது லஞ்சம் பெருகியதால் கொஞ்சமும் வாழ தகுதியற்ற சமூகமாக மாறி வருகிறது 16 கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய பாலம் 3 மாதம் கூட முழுமையாக இல்லாமல் கரைந்து போவதும், தஞ்சாவூரில் கட்டிய பாலம் 10 நாட்களில் லாரி சிக்கி, பலர் சாரி கேட்ட பிறகு பாலம் இருந்த சுவடு தெரியாமல் ஆன கதையும் மக்கள் வரிப்பணம் பாலாய் போன செய்தியும் இங்கு உண்டு. பலரிடம் “லஞ்சம் வாங்கு தொந்தி நிரப்பு, சொத்துக்கள் பெருக்கு என்ற கொள்கையோடு இருக்கின்ற பலரையும் கால நேரம் பார்த்து கச்சிதமாக லஞ்ச ஒழிப்பு காவல் துறை கைது செய்கிற நடவடிக்கை நாள்தோறும் நடந்து கொண்டே தான் இருக்கிறது தஞ்சாவூர் மாநகராட்சியிலும் கூடிய விரைவில் சிலர் சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் மாட்டிய செய்தி கீழ்கண்டவாறு:
திருச்சி கே.கே.நகர் இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் திருச்சி கொட்டப்பட்டு கிராமம் அன்பில் நகரில் சுமார் 5,920 சதுரடி உள்ள காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய விண்ணப்பித்திருக்கிறார். இதற்காக Zone-IV பொன்மலை மண்டலம் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் 65வது வார்டு பில் கலெக்டர் செபஸ்தியானை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் 12,000 ரூபாய் கையூட்டாக கேட்டுள்ளார். அதன் பிறகு சீனிவாசன் கெஞ்சியதன் பேரில் கையூட்டுத் தொகையை 10,000 ரூபாயாக குறைத்துக் கொண்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் கடந்த 11ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதனையொட்டி நேற்று துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர் இணைந்து லஞ்சம் வாங்கும்போது சிக்க வைக்கும் திட்டத்தைத் தீட்டி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதை அறியாத பில் கலெக்டர் செபஸ்தியான், சீனிவாசனிடமிருந்து 10,000 ரூபாய் லஞ்சப் பணத்தை நேற்று தனது அலுவலகத்தில் வைத்து வாங்கிய போது கையும் களவுமாக பிடித்தனர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்.
பில் கலெக்டர் செபஸ்தியானை கைது செய்து சோதனை செய்தபோது அவரிடம் கணக்கில் வராத மேலும் 24,000 ரூபாய் இருந்ததை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டறிந்தனர். இந்தத் தொகையை சந்தேகத்தின் பேரில் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை இது தொடர்பாக திருச்சி பொன்மலை மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.