மாநாடு 19 June 2025
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் செயல்படும் மாநில தகவல் ஆணையத்தில் 1 தலைமை தகவல் ஆணையர் மற்றும் 6 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள். தகவல் ஆணையராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் மற்றும் தகவல் ஆணையர்கள் 4 பேரின் பதவிக்காலம் கடந்த 2022 நவம்பர் மாதம் முடிவடைந்தது. புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகில் அக்தரும், தகவல் ஆணையர்களாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.தாமரைக்கண்ணன்
வழக்கறிஞர் ஆர்.பிரியகுமார், ஓய்வுபெற்ற ஐசிஎல்எஸ் அதிகாரி கே.திருமலைமுத்து, பேராசிரியர் எம்.செல்வராஜ் ஆகியோர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து மீதமுள்ள 2 தகவல் ஆணையர்கள் பதவியிடத்துக்கு தகுதியானவர்கள் தேர்வு நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தகுதியானவர்கள் பட்டியல் தயாரித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து தகவல் ஆணையர்களாக வி.பி.ஆர்.இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் ஆகியோரை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கான பதவியேற்பு விழா அடுத்த வாரம் ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.