மாநாடு 29 July 2025
தேர்தல் காலம் நெருங்கும் வேலையில் தமிழகத் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் பணியை செய்ய இப்போதுதான் உறுதிமொழி ஏற்று கையெழுத்திட்டு வந்தது போல பல இடங்களிலும் மக்கள் பணியாற்ற கிளம்பி இருக்கிறார்கள் அதே போல பல ஊழல்களையும் பட்டியலிடத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது நாள்தோறும் நாம் காணும் காட்சியாக இருக்கும் வேலையில் இன்று மதுரை மாநகராட்சியில் அதிமுக உறுப்பினர்களுக்கும் திமுக உறுப்பினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்று இருக்கிறது அதன் விவரம் பின்வருமாறு :
மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள் 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரியைவிட குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணையில் 150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனைப் பற்றி அப்போதைய மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து வரி விதிப்பு முறைகேட்டில் தொடர்புடைய ஓய்வுபெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் வரி விதிப்பு முறைகேட்டில் திமுகவைச் சேர்ந்த மண்டலத் தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளது என எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் மண்டலத் தலைவர்களிடமும் விசாரணை நடத்தினார்கள்
இதனிடையே மண்டலத் தலைவர்கள் 5 பேர், நிலைக் குழு உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 7 பேரை ராஜினாமா செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அவர்கள் அனைவரும் அண்மையில் ராஜினாமா செய்தார்கள்.
மதுரை மாநகராட்சியில் பணியாற்றிய வருவாய் உதவியாளர்கள், கணினி இயக்குபவர் உள்ளிட்ட 55 பேரிடம் மத்திய குற்றப் பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தினர். அதில் வருவாய் உதவியாளர்கள் 7 பேர், கணினி இயக்குபவர் ஒருவர் என 7 பேரை பணியிடை நீக்கம் செய்தும், தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றிய நாகராஜன், மகாபாண்டி, பாலமுருகன் ஆகிய 3 பேரை பணிநீக்கம் செய்தும், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உத்தரவிட்டார்.
இந்தப் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று காலை தொடங்கியது. முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர்.
தொடர்ந்து, காலை 10.35 மணிக்கு மேயர் இந்திராணி கூட்டரங்குக்கு வருகை தந்தார். அவருடன் ஆணையர் சித்ரா விஜயனும் வருகை தந்தார். வழக்கம் போல மேயர் உரையாற்றத் தொடங்கினார்.
அப்போது அதிமுக உறுப்பினர்கள், எழுந்து வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக முழக்கங்களை எழுப்பி, மேயர் இருக்கையை நோக்கி முற்றுகையிட முற்பட்டனர். திமுக உறுப்பினர்கள் எழுந்து அதிமுக உறுப்பினர்களை வழிமறித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள், பாஜக உறுப்பினர் ஒருவர் என அனைவரும் வெளியேற்றப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.