மாநாடு 15 April 2022
நம்மில் நிறையப் பேர் அவசர அவசரமாக பணம் எடுக்க ஏடிஎம் சென்றிருப்போம். ஆனால் அங்கே போன பின்னர்தான் தெரியும். ஏடிஎம் கார்டை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டோம் என்று. இதுபோன்ற சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்? மீண்டும் வீட்டுக்குச் சென்று ஏடிஎம் கார்டை எடுத்து வந்து பணம் எடுப்பீர்களா?
இதுபோன்ற பிரச்சினைகளை இனி நீங்கள் சந்திக்கவே தேவையில்லை. ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதி உள்ளது. இந்த வசதி ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால், அனைத்து வங்கிகளிலும் – ஏடிஎம்களிலும் இல்லை. இது ஒரு குறையாகவே இருந்தது. இந்நிலையில் அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி கொண்டுவரப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதில் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று QR code மூலமாக எடுப்பது. மற்றொன்று UPI ஆப் மூலமாக.
ஏடிஎம் மெஷினில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு மொபைல் நம்பர் போன்ற விவரங்களைப் பதிவிட்டவுடன் மெஷினில் QR code உருவாக்கப்படும். அதை நீங்கள் பயன்படுத்தும் UPI ஆப் மூலமாக ஸ்கேன் செய்து பணம் எடுக்கலாம்.
இன்னொரு பணம் எடுக்கும் முறை: உங்களுடைய UPI ஐடி மற்றும் தொகையை மெஷினில் பதிவிட்டு மொபைல் மூலமாக பணம் அனுப்பி அதை எடுக்கலாம்.
இதுபோன்ற வசதிகளால் இனி ஏடிஎம் கார்டே இனி தேவைப்படாது. ஷாப்பிங் செய்வது, பெட்ரோல் போடுவது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு ஸ்மார்ட்போனை வைத்தே வேலையை முடித்துவிடலாம். பணம் எடுப்பதற்கு மட்டுமே ஏடிஎம் கார்டு பயன்படுத்துகிறோம். இனி அதற்கும் தேவைப்படாது. இதையும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டியது நமது பொருப்பு.