மாநாடு 6 May 2022
அன்றாடம் நாம் நமது இல்லங்களில் நிம்மதியாக தூங்குகிறோம் என்றால் நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக நமக்காக ஒரு சிலர் தூங்காமல் கண் விழித்து காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்.அவ்வாறாக காவல் காத்துக் கொண்டிருக்கின்ற காவல் துறையினர் மத்தியில் சில கருப்பு ஆடுகளும் இருக்கத்தான் செய்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக சாத்தான்குளம் தந்தை,மகன் படுகொலை மரணமும் அதேபோல சில நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இப்போதும் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்கள் மரணம் அடைந்தது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.நாட்டில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றக்கூடிய கடமை காவல்துறையினருக்கும் அதிகமாக உள்ளது இந்நிலையில் இச்சம்பவம் அரசுக்கும் காவல்துறைக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது அந்த சம்பவங்களை பற்றி பார்ப்போம்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தட்டரணை கிராமத்தில் பழங்குடி குறவர் இனத்தைச் சேர்ந்த 120 பேர் வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அந்த கிராமத்துக்கு வந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் சாராயம் காய்ச்சி விற்றதாகக் கூறி தங்கமணி என்பவரை அழைத்து சென்றிருக்கிறார்கள்.
விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். மறுநாள் காலையில் தங்கமணியின் உறவினர்களுக்கு போன் செய்த காவலர் அவருக்கு திடீரென வலிப்பு வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள். மீண்டும் மாலையில் போன் செய்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தங்கமணி, உயிரிழந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கபா பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தங்கமணியின் லாக்கப் மரணத்தை மறைக்க அவரது குடும்பத்தினரிடம் 7 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாக அவரது மகன் திருமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் எனது தந்தை தங்கமணி இறந்ததிலிருந்து 2 நாட்களாக காவலர்கள் என்னை தூங்கவிடவில்லை. எனது தந்தையின் லாக்கப் மரணத்தை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்று சொல்லி என்னிடமும், எனது குடும்பத்தினரிடமும் பேரம் பேசினார்கள். முதல் நாள் 2 லட்சத்தில் தொடங்கிய பேரம் படிப்படியாக வந்து 7 லட்சம் ரூபாயில் முடிந்தது. டி.எஸ்.பி. அண்ணாதுரை, தாணிப்பாடி உதவி ஆய்வாளர் முத்துக்குமார சாமி உட்பட நான்கைந்து பேர் வந்து பேரம் பேசினார்கள்.எனது தந்தை தங்கமணியின் உடலை வாங்கிச் சென்று அடக்கம் செய்யும்படியும், தேவையில்லாமல் பிரச்னை செய்து எங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் என்றும் மிரட்டும் தொணியில் பேசினார்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். தமிழக அரசும், காவல்துறையும் அதை ஏற்க மறுத்து வந்தது. ஆனால் அப்பகுதி மக்கள் உயிரிழந்த தங்கமணி மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிந்து சிறையிலடைத்ததாகவும், காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாலேயே தங்கமணி உயிரிழந்ததாகவும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க முயற்சித்தனர். ஆனால், மனுவை வாங்க ஆட்சித்தலைவர் மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த தங்கமணியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி திருவண்ணாமலையில் தங்கமணி என்பவர் காவல்நிலையத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருந்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட தங்கமணி முதற்கட்ட விசாரணைக்கு பிறகு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டதாகவும், சிறையில் ஏற்பட்ட வலிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் எனவும் முதலமைச்சர் கூறினார். உடல் நலம் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சிறையில் இருந்த தங்கமணி மருத்துவமனைக்கு இரவு சுமார் 7.30 மணிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமணி சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 8.40 மணி அளவில் உயிரிழந்துள்ளார். தங்கமணியின் உடல் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது நீதித்துறை நடுவர் முன்னிலையில் உடற்கூறாய்வு நடைபெற்றுள்ளது.
அதன் அறிக்கை கிடைத்தவுடன் உரிய விசாரணை நடத்தப்பட்டு தெரிவிக்கப்படும் என்பதை பதிலாக எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் நியாயமான முறையில் வழக்கு நடைபெறும் என காவல்துறையினர் கூறியதன்படி தங்கமணியின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறிய முதலமைச்சர், விசாரணை அறிக்கையின் படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இந்நிலையில் உயிரிழந்த தங்கமணியின் உடலில் காயம் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் சென்னை விக்னேஷ் போலவே திருவண்ணாமலை தங்கமணியும் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பார் என்று கருதப்படுகிறது.
கடந்த 10 மாதத்தில் தமிழக அரசின் லாக்கப் டெத் 2 ஆக அதிகரித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தைப்போல, திமுக ஆட்சியில் கடந்த ஒரு வருடத்திற்குள் 2 மரணங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
