மாநாடு 08 March 2023
எழுதாத பேனாவிற்கு 80 கோடி கடலில் , எழுதி படிக்க வேண்டிய மாணவனுக்கு 34 தையல் தலையில்! என்ன நடந்தது ? எங்கு நடந்தது ? பார்ப்போம்.


தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பருத்திக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 18 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளியில் நேற்று மாலை வகுப்பு நடந்து கொண்டிருந்த போது பள்ளி கட்டிடத்தின் மேலிருந்த காரைகள் பெயர்ந்து விழுந்ததில்


ஏதும் அறியா 8 வயது மாணவனான 3ஆம் வகுப்பு படிக்கும் பருத்திக்குடி வளையாவட்டம் திருக்கழித்தட்டை, கீழத்தெருவை சேர்ந்த கோபி என்பவரின் மகன் விக்னேஷ் மண்டை உடைந்து ரத்தம் கொட்டி வழிந்து ஓடியிருக்கிறது.


மண்டை உடைந்த மாணவனை உடனடியாக திருவிடைமருதூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவனை அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்ததின் பேரில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மூன்றாம் வகுப்பு மாணவன் சேர்க்கப்பட்டு மண்டையில் 34 தையல் போடப்பட்டதாக கூறப்படுகிறது.


அரசின் தொடக்கப்பள்ளி கட்டிடம் பெயர்ந்து விழுந்து, மாணவர் மண்டை உடைந்த செய்தி கேள்விப்பட்டு அரசு கொறடா கோவி.செழியன், கல்வித்துறை அதிகாரிகள், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என பலரும் மாணவனை பார்க்க வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பெற்றோர்கள் தரப்பில் கூறும் போது பள்ளி கட்டிடம் பழுதாகி இருக்கிறது, இதனை சீர் செய்து பழுது நீக்க வேண்டும் என்று பலமுறை பெற்றோர்கள் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது,

பள்ளி ஆசிரியர்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் பலமுறை சொல்லியும், சேர்மனிடம் மனு கொடுத்தும், பழுதை நீக்காமல், பழுதான கட்டிடத்திற்கு வெள்ளை மட்டும் அடித்து விட்டு

அலட்சியமாக இருந்தவர்களின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டு எட்டு வயது மாணவன் மண்டை உடைந்து 34 தையல் போடும் நிலை உருவாகி இருக்கிறது, இனியாவது கட்டிடத்தை பழுது நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இச்சம்பவத்தை பற்றி சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது : தமிழக முதல்வர் ஊர் ஊராகச் சென்று உங்கள் ஊரில் முதல்வர் அது இது என்று பல்வேறு பெயர்களைச் சூட்டி குறைகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள், நான் தீர்த்து வைக்கிறேன். அதற்காக தான் இருக்கிறது இந்த திராவிட மாடல் அரசு என்று தொடர்ந்து பேசி வருகிறார். பல்வேறு ஊடகங்களில் அப்பேச்சும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மதுரையில் பேசிய போது கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல பலரின் வாழ்க்கை என்று பேசி அதிகாரிகளுக்கு வகுப்பெடுத்தார், சுட்டிக்காட்டி அறிவுறுத்தினார், இப்படி இருக்கின்ற போது பல ஊர்களிலும், பல மாவட்டங்களிலும் பல பிரச்சனைகள் வெகு நாட்கள் ஆகியும் தீர்க்கப்படாமல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது, மனுக்கள் கொடுத்தவர்களே மறக்கும் அளவிற்கு மந்தமாக கிடப்பில் கிடக்கிறது மனுக்கள். இந்த நிலையினை உண்மையிலேயே போக்க நினைத்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறான நிலைக்கு காரணமாக தெரியப்படுபவர்களையாவது உடனடியாக களை எடுத்து, கடுமையான தண்டனைகள் கொடுத்தால், பணி நீக்கம் செய்தால் மட்டுமே இந்நிலை தொடராமல் இருக்கும், அதேபோல பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சர் இருக்கிறார் அவரும் அரசு பள்ளிகள் மீது உண்மையிலேயே அக்கறை எடுத்து அவ்வப்போது ஆய்வு செய்து இந்நிலையில் உள்ள பள்ளிகளை சரி செய்ய வேண்டும். அப்போதுதான் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் பாதுகாப்பாக உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்துவார்கள் . பெற்றோர்களும் மாணவ, மாணவியர்களை அரசு பள்ளியில் சேர்ப்பார்கள் என்றார்கள் சமூக ஆர்வலர்கள்.
முதல்வரும், அமைச்சரும் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா? இவர்களும் அலட்சியமாக இருப்பார்களா பார்ப்போம்.

