மாநாடு 8 October 2022
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கத்தின் மத்திய சங்க நிர்வாக குழு கூட்டம் நேற்று 7.10.22 மதியம் 3 மணியளவில் சங்கத் தலைவர் என்.சேகர் தலைமையில் நடைபெற்றது.
தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் போனஸ் பேச்சுவார்த்தை துவக்கப்படவில்லை, 1 மாத காலத்திற்கு முன்னதாகவே தீபாவளி முன்பணம் வழங்கியிருக்க வேண்டும்,அதற்கான நடவடிக்கை இதுநாள்வரை இல்லை, அரசு உடனடியாக அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி போனஸ் பேச்சு வார்த்தையை துவக்க வேண்டும். அனைவருக்கும் 25 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும், தீபாவளி முன்பணம் ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும், போனஸ் சட்டத்தின் படி 30 நாட்கள் பணிபுரிந்த அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும் ,பேருந்து நிலையங்களில் பணிபுரியும் பயணிகளை கூவி அழைப்பவர், பணிமனைகளில் பணிபுரியும் பேருந்துகள் சுத்தம் செய்பவர் உள்ளிட்ட அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும் , போனஸ் உச்ச வரம்பு தளர்த்தப்பட்ட காலத்திற்கு பின்னதாக போனஸ் தொகை உயர்த்தி வழங்கி இருக்க வேண்டும் ,ஆனால் கடந்த கால ஆட்சியில் வழங்கப்படவில்லை. இந்த வருடம் கடந்த கால போனஸ் நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்க அரசை வலியுறுத்தி கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக எஐடியூசி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அக்டோபர் 10 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.
மளிகை கூட்டுறவு பண்டக சாலைக்கு தேவையான பணத்தினை வழங்கி, தீபாவளி பண்டிகைக்கு உரிய பொருட்கள் அனைத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்க ஏதுவாக அதற்குரிய உதவிகளை செய்ய வேண்டும் என்று கும்பகோணம் கழக மேலாண் இயக்குனரை நிர்வாக குழு கூட்டம் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன் சம்மேளன துணைத் தலைவர் துரை.மதிவாணன் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்று 1 மாதமாகியும் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த பலன்கள் கிடைக்கவில்லை என்று பேசினார். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம், மாவட்ட தலைவர் வெ.சேவையா, நுகர்பொருள் வாணிப கழக சங்க மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் பி.அப்பாத்துரை, போக்குவரத்து சங்க நிர்வாகிகள் டி.கஸ்தூரி, எம். மாணிக்கம், கே.சுந்தர பாண்டியன், டி.சந்திரன், ஆர்.ரங்கதுரை, என்.ஆர். செல்வராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சி.ராஜமன்னன் நன்றி கூறினார்.