மாநாடு 14 October 2022
ஒரு நாட்டில் உழவன் தன் வாழ்வாதாரத்திற்காக போராடி உரிமையை பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றால், விரைவில் அந்நாட்டு மக்கள் தங்கள் உயிரை காப்பதற்காக உணவை தேடி அலைய வேண்டிய நிலை வரப்போகிறது என்று அர்த்தம்.
இன்று மாலை ஏறக்குறைய 3.30 மணியிலிருந்து 5 மணி வரை தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே உள்ள ஆலக்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் 150 விவசாயிகள் ஈடுபட்டார்கள்.
இதைப் பற்றி விவசாயிகள் நம்மிடம் கூறியதாவது : நாங்கள் அரும்பாடு பட்டு உழவு செய்து நெல்மணிகளை காத்து ,வளர்த்து அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.
ஆனால் இங்கு எங்கள் நெல்களை உடனடியாக கொள்முதல் செய்வதில்லை சாதாரணமாகவே காலம் தாழ்த்தி தான் பணியாளர்கள் பணிக்கு வருகிறார்கள், அதன் காரணமாக மாலை 3 மணியிலிருந்து இரவு 12 மணி வரை நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது, ஒரு நாளில் 1500 இருந்து 2000 மூட்டை வரை கொள்முதல் செய்ய முடியும்,
ஆனால் காலம் தாழ்த்தி தொழிலாளர்கள் பணிக்கு வருவதால் 500 லிருந்து 600 மூட்டை வரை தான் கொள்முதல் செய்யப்படுகிறது. அதுவும் அவர்களுக்கு தேவையான ஆட்களாக பார்த்து கொள்முதல் செய்து கொள்கிறார்கள், இதன் காரணமாக எங்கள் பலருடைய உழைப்பும் வீணடிக்கப்பட்டு எங்களது நெல் மூட்டைகள் மழையில் நனைந்து ஈரமாகிறது,
இந்த சூழல் தொடர்ந்து வருகிறது இதனை கண்டித்து இன்று மாலை நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது ஆலக்குடியில் பூதலூர் செல்லும் ஏ 50 என்கின்ற அரசு பேருந்தை தடுத்து நிறுத்தினோம்.
போராட்டம் நடந்த இடத்திற்கு வல்லம் காவல் நிலைய காவலர்கள், கிராம நிர்வாக அதிகாரி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள், வட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
பிறகு போராட்டத்தை கைவிட்டோம், இப்போது நெல் பிடிக்கப்படுகிறது. ஆனால் மழை பெய்ய தொடங்கிவிட்டது, எங்களது நெல்கள் மழையில் நனைவதை பார்த்து நாங்கள் துடித்துக் கொண்டிருக்கிறோம், ஒவ்வொரு முறையும் நாங்கள் போராடிக் கொண்டிருக்க முடியாது, எனவே இனி கால நேரத்தோடு எங்கள் நெல்மணிகளை கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்கள். சாலை மறியலால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.