மாநாடு 16 February 2022
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க அரசு செலுத்திய 68 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதாகவும், கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தமிழக அரசு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் தோட்டம் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற கடந்த அதிமுக ஆட்சியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக 68 கோடி ரூபாயை சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது.ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியும் இந்த தொகையில் இருந்து சரி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கபட்டது.
இந்த மனுக்களை விசாரித்த சிவில் நீதிமன்ற நீதிபதி, அரசின் இழப்பீட்டுத் தொகையைப்பெற்றுக் கொள்ளுங்கள் என்று தீபா, தீபக் மற்றும் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து சட்டபூர்வ வாரிசுகள் என்று தீபக், தீபா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி, போயஸ் தோட்டம் நிலத்தை கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து, கடந்த நவம்பர் 24ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை எனவும் நிலத்தை கையகப்படுத்திய உத்தரவு ரத்து செய்ததை உறுதிபடுத்தியும் அதிமுக வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இந்த நிலையில் சென்னை ஆறாவது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வருவாய் கோட்டாட்சியர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் வேதா இல்லத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக செலுத்திய 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெறுவதாகவும், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், வருமானவரித்துறையின் சார்பில் சில விளக்கம் தேவைப்படுவதால் வரும் 18ந்தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைப்பதாகவும், அன்று அவர்கள் தரப்பில் விளக்கம் அளித்த பிறகு உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்து வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தது.