மாநாடு 25 January 2024
மக்களுக்கும் ஆளுகின்ற அரசுக்கும் பாலமாக திகழ்கின்ற ஊடகவியலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இங்கு உள்ளது என்பதை மெய்ப்பிக்கும் விதத்தில் நேற்று திருப்பூர் பல்லடத்தில் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு சமூக விரோத கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் கண்முன்னே சாட்சியாக நிற்கின்றது.
நியூஸ்7 செய்தியாளர் நேச பிரபு தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை காவல்துறையிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தும் கூட ஏதோ அழகி போட்டிக்கு வந்தவரிடம் கேள்வி கேட்பது போல எந்த நிறத்து வாகனத்தில் வந்திருக்கிறார்கள் , கொலையாளிகள் வந்திருக்கும் வாகனத்தின் எண் என்ன ? பைக் என்றால் அதிவேக பைக்கா அல்லது சாதாரண பைக்கா என்று கேள்விகளை கேட்டு காலம் தாழ்த்தி நேரத்தை விரயம் செய்ததால் வீரியமிக்க செய்தியாளராக நேற்று வரை அனைவருக்காகவும் உழைத்த நியூஸ்7 செய்தியாளர் நேச பிரபு இன்று நிலைகுலைந்து மருத்துவமனையில் கிடக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காவல் துறை இவ்வளவு அலட்சியமாக நடந்ததன் மூலம் நேற்று வரை நலமாக உலாவி வந்த ஊடகவியலாளருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறது என்பது சமூக ஆர்வலர்களால் வெக்கித் தலை குனிந்து பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் , சமூக ஆர்வலர்களும், பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அத்தனை பேரும் அறிக்கையின் வாயிலாக தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் அதன்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை கீழ்கண்டவாறு தெரிவித்திருக்கிறார் .
திருப்பூர், பல்லடத்தைச் சேர்ந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளரான தம்பி நேசபிரபு அவர்கள் மீது சமூக விரோதிகள் கோரத்தாக்குதல் தொடுத்த செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் அதிகரித்து வரும் வன்முறை வெறியாட்டங்களும், கொலைவெறிச்செயல்களும், ஆணவக் கொலைகளும் சட்டம் ஒழுங்கின் இலட்சணத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
பத்திரிகையாளரான தம்பி ஷபீர் அகமதுவுக்கு வெளிப்படையாகக் கொலைமிரட்டல் விடுக்கப்படுவதும், பத்திரிக்கையாளரான தம்பி நேசபிரபு அவர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதுமான கொடும் நிகழ்வுகள் அரசின் கையாலாகத்தனத்தையே காட்டுகின்றன. தம்பி நேசபிரபு அவர்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதைக் கூறியும், தகுந்த நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரின் அலட்சியப் போக்கினாலேயே இவ்வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. தம்பி நேசபிரபு மீதானத் தாக்குதலுக்கு எனது வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே, தம்பி நேசபிரபுவைத் தாக்கிய கொடுங்கோலர்கள் மீது கடும் சட்டப்பிரிவுகளின் வழக்குத் தொடுத்து, உடனடியாக அவர்களை சிறைப்படுத்த வேண்டுமெனவும், தம்பி நேசபிரபு உடல்நலம் பெற்று, மீண்டுவர தகுந்த மருத்துவச்சிகிச்சை வழங்கப்படுவதையும், அவரது முழு பாதுகாப்பினையும் உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். என்று தனது அறிக்கையில் வலியுறுத்தி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.