மாநாடு 14 June 2025
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளமாக, ஒப்பந்ததாரர் மூலமாக, 20 ஆயிரத்து, 454 ரூபாய் மட்டுமே வழங்க இயலும்; அதற்கு மேல் கொடுக்க வாய்ப்பில்லை’ என, மாநகராட்சி நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் கலெக்டர் நிர்ணயித்துள்ள கூலி ரூ.770 வழங்க வேண்டிய அவசியமில்லை என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்திருக்கிறார்.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி ரூ.770 வழங்கக் கோரி, கலெக்டர் அலுவலகம் முன் நான்காம் நாளாக நேற்றும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். 350க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர். இச்சூழலில், பேச்சுவார்த்தையில் கூறியது தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி தொகை நிகர மாத சம்பளம் ரூ.16 ஆயிரம். சென்றாண்டை விட கூடுதலாக ரூ.1,250 பணியாளர்களின் வங்கி கணக்கில் ஒப்பந்ததாரரால் வழங்கப்படும். பேச்சுவார்த்தையில் கோரிய கூடுதல் ஊதியம் குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு கருத்துரு அனுப்பி ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
பணியாளர்களின் பி.எப்., தொகை ரூ.3,750. இதில் நிறுவன பங்கு ரூ.1,950, தொழிலாளர் பங்கு ரூ.1,800, இ.எஸ்.ஐ., ரூ.704. இதில் நிறுவன பங்கு ரூ.572, தொழிலாளி பங்கு ரூ.132. இதை சேர்த்தால் மாத சம்பளம் ரூ.20 ஆயிரத்து, 454. பிடித்தம் செய்யப்படும் தொகை அந்தந்த மாதங்களில் பணியாளர்கள் கணக்கில் ஒப்பந்ததாரரால் வரவு வைக்கப்படும். இ.எஸ்.ஐ., – பி.எப்., தொகை குறித்து துாய்மை பணியாளர்களுக்கு தெரிவிக்க அனைத்து வார்டுகளிலும் முகாம் நடத்தப்படும்.
சம்பள ரசீது 20ஆம் தேதிக்குள் வழங்கப்படும். சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், ஒளிரூட்டும் மேல்சட்டை, கையுறை வழங்கப்படும். காப்பீடு திட்டங்கள் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு இதுபோன்ற ஊதியம் வழங்குவது தொடர்பாக கருத்துரு அனுப்பி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிறகு மாநகராட்சி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் நேற்று மீண்டும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசினார். ஒப்பந்த நிறுவனத்தின் நிலைபாட்டை கமிஷனர் தெரிவித்தார். அதற்கு கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என கூட்டமைப்பினர் கூறியதால் சிறிது நேரத்திலேயே கூட்டம் முடிவடைந்திருக்கிறது.
இது தொடர்பாக கமிஷ்னர் தெரிவித்திருப்பதாவது துாய்மை பணியாளர்களுக்கு ரூ.20,454 மட்டுமே மாத சம்பளம் வழங்க முடியும் என தெளிவுபடுத்தி விட்டோம். மீண்டும் ஒரு முறை பேசினேன் இதை விட அதிகமாக கொடுக்க இடமில்லை என ஒப்பந்ததாரர் கூறி விட்டதாக கூறினேன். கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி ரூ.770 கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கலெக்டர் நிர்ணய சம்பளம், பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் நிர்ணயிக்கும் கூலியில் எது குறைவோ, அத்தொகை வழங்கலாம். அதன்படி நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஒப்புதல் வழங்கியுள்ள தொகை வழங்கப்படுகிறது. தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற கூடுதலாக பொக்லைன் வாகனங்கள், லாரிகள் இயக்கப்படுகின்றன. ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைகள் நாளைக்குள் (இன்று) எடுக்க அறிவுறுத்தியுள்ளேன். தொழிலாளர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.