மாநாடு 15 October 2022
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையையும், செவிலியர்களுக்கு இருக்கின்ற துன்பங்களையும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டினால் என்னென்ன துன்பங்கள் நோயாளிகளுக்கும், அங்கு பணியாற்றும் செவிலியர்களுக்கும், மாற்றுத்திறனாளி மருத்துவ ஊழியர்களுக்கும், இருக்கிறது என்பதையும் கிரிஸ்டல் என்கிற தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்களின் அத்துமீறலையும், நமது மாநாடு இதழிலும், மாநாடு youtube சேனலிலும் சுட்டி காட்டி செய்தி வெளியிட்டு இருந்தோம்.
மருத்துவப் பணியில் எவ்வளவு அர்ப்பணிப்போடு செவிலியர்களும், மருத்துவர்களும் கொரோனா காலத்தில் பணியாற்றினார்கள் என்பதை ஒவ்வொரு தனிமனிதரும் நன்கு அறிவோம், அவர்களின் பணியை ஊக்கப்படுத்தும் விதமாக இருக்க வேண்டிய அரசே அவர்களை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறையினால் நோயாளிகள் மிகவும் துன்பப்பட்டு வருகிறார்கள், இந்த நிலையையும் எடுத்துக் கூறி அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செவிலியர்கள் கோரிக்கை மனுவும் கொடுத்திருக்கிறார்கள்
ஆனால் இதுவரை எந்தவித முன்னேற்ற நடவடிக்கையும் இல்லை என்று தெரிய வருகிறது. இந்நிலை தமிழ்நாட்டின் தலைநகரம் தொட்டு அனைத்து இடங்களிலும் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி தமிழக அரசு உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை விட்டிருக்கிறார் அதில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான செவிலியர் பற்றாக்குறையினால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. புதிதாகச் செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி (MMC), கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி (KMC), ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளுடன் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளும் அதிக நோயாளிகளைப் பராமரிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு நோயாளிகளுக்கான படுக்கை இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கேற்றவாறு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்கள் அதிகரிக்கப்படாமலும், காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமலும் இருப்பதால் நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவம் கிடைக்கப்பெறாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், மிக அதிகமான பணிச்சுமையினால் செவிலியர்களும் உடல் மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாவதால் நோயாளிகளைச் சரிவரக் கவனிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தான சூழலும் ஏற்படுகிறது.
ஆகவே, நோயாளிகளை உரிய நேரத்தில் பராமரித்து மருத்துவம் அளிக்கவும், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணிச்சுமையைக் குறைக்கும் வகையிலும் , அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை சரிசெய்ய தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று சீமான் அறிக்கை விட்டு இருக்கிறார்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை படிக்க பார்க்க இந்த லிங்கை தொடவும் https://maanaadu.in/tmch/