மாநாடு 22 November 2022
தஞ்சாவூரில் பழமையானதும் புகழ்பெற்றதுமான அரண்மனை அருகில் இருந்த காமராஜ் மார்க்கெட்டில் நெடுங்காலமாக இயங்கி வந்த கடைகளை (ஸ்மார்ட் சிட்டி ) எழில் மிகு நகர திட்டத்திற்காக காலி செய்துவிட்டு மாநகராட்சி சார்பில் புதிதாக 20 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் கடைகள் கட்டப்பட்டது.
அவ்வாறு கட்டப்பட்ட கடைகளை தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது,
அதனால் காலை முதலே திமுகவினரும், கடையை வாடகைக்கு எடுத்தவர்களும், திமுகவின் தஞ்சை மாவட்ட செயலாளரும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகர் , திமுகவின் தஞ்சாவூர் மாநகர செயலாளரும் தஞ்சாவூர் மேருமான சண்.ராமநாதன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாநகராட்சி ஊழியர்களும், திரண்டு இருந்தார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் காமராஜ் மார்க்கெட் கடைகளை திறந்து வைக்கும் நேரம் காலை 11:30 மணி ஆகும் என்று தெரிய வந்த நிலையில், முதலமைச்சர் காணொளி காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரையிட்டு சட்டமன்ற உறுப்பினர்களும், மேயரும் மற்றும் திமுகவினரும், ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதைகண்ட வாக்களித்த பொதுமக்கள் வாய் அடைத்து நிற்கிறார்கள், பொதுமக்களும் கூடி இருகின்ற அந்த இடத்தில் அந்தத் திரையில் உண்மையிலேயே திமுக 18 மாதங்களில் சாதனை செய்து இருந்தால், அதை ஒளிபரப்பு செய்து மக்களுக்கு காண்பித்திருக்கலாம், அல்லது தஞ்சாவூர் மாநகராட்சியிலாவது ஏதாவது சாதனைகளை பொது மக்களுக்கு பயன்படும்படி செய்து இருந்தால், அதையாவது திரையிட்டு காட்டி இருக்கலாம்.
ஆனால் இதையெல்லாம் விடுத்துவிட்டு பொன்னியின் செல்வன் என்கிற திரைப்படத்தை காட்டுவதன் மூலம் 18 மாதங்களில் திமுக நிறைய படம் மட்டுமே மக்களுக்கு காட்டிக் கொண்டிருப்பது நிரூபணம் ஆகிறது என்று தெரிகிறது.
பொதுவெளியில் மக்கள் ஊழியர்கள் திரையில், பொதுமக்களிடையே இப்படி படம் காட்டி, படம் பார்ப்பது அனைவரையுமே முகம் சுளிக்க வைத்திருக்கிறது.