மாநாடு 28 October 2022
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தஞ்சாவூரில் கஞ்சா போதையில் கருந்தாட்டாங்குடியில் ஆடிட்டர் மற்றும் கடைக்காரர் என அடுத்தடுத்து கொலைகள் நடந்து பரப்பரப்பு ஏற்படுத்தி இருந்தது,
அதேபோல இப்போதும் தஞ்சாவூரில் அடுத்தடுத்து படுகொலைகள் நடைபெற்று வருவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது, கடந்த 19ஆம் தேதி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ்மோகன் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்திருக்கிறது, அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பாக வடக்கு வாசல் பகுதி கங்கா நகரை சேர்ந்த சாமிநாதன் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்த செய்தி தஞ்சாவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்.
நேற்று தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் பைக்கில் வந்த வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சை அருகே மாதாக்கோட்டை டான்பாஸ்கோ தெருவை சேர்ந்தவர் செபாஸ்டியனின். மகன் பிரின்ஸ் லாரா என்கிற 28 வயதுடைய சின்னா பெயிண்டர் தொழில் செய்து வந்துள்ளார், இவருக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு பிரின்ஸ்லாரா திருக்கானூர்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரை மர்மநபர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்து பிரின்ஸ் லாரா சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்கள்.
இந்த தகவல் அறிந்து வல்லம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரின்ஸ் லாராவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சை பலனின்றி பிரின்ஸ் லாரா இறந்திருக்கிறார். இதுகுறித்து வல்லம் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திருக்கானூர்பட்டி பாலத்தின் அடியில் ஏறக்குறைய கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் பகுதியில் தொடர் கொலைகள் நடந்து வருவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பற்றி அரசியல் நோக்கர்கள் கூறும் போது எப்போதுமே திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் தலைதூக்கும் என்பதற்கு இதெல்லாம் உதாரணம் என்கிறார்கள். அரசும் சம்பந்தப்பட்டவர்களும் சட்ட ஒழுங்கை காக்க மிகத் தீவிரமாக ஈடுபட வேண்டிய தருணம் இது. சம்பந்தப்பட்டவர்கள் சட்ட ஒழுங்கை காத்து பொதுமக்கள் அமைதியாக வாழ வழி வகுத்துக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
