மாநாடு 02 January 2023
திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகள் அட்டூழியம் அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் குற்றம் சாட்சி வரும் நிலையில் பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலரையே கதறி அழ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது அதன் விவரம் பின்வருமாறு:
திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன்படி சென்னை விருகம்பாக்கம் பகுதிக்குட்பட்ட தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஆண் காவலர்களும், பெண் காவலர்களும் ஈடுபட்டிருந்தார்கள், இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றவுடன், இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது மதிக்கத்தக்க பெண் காவலரிடம் இரண்டு இளைஞர்கள் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பெரும் தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள், அவர்களின் சீண்டல் எல்லை மீறி செல்ல பொறுத்துக் கொள்ள முடியாத பெண் காவலர் சத்தமாக கதறி அழுதுள்ளார்.

இதனை அறிந்த சக காவலர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களையும் பிடிக்க முற்பட்டபோது தப்பி ஓட அந்த இருவரும் முயற்சித்த போது ஒரு இளைஞரை உடனே காவலர்கள் பிடித்திருக்கிறார்கள். இன்னொருவன் தப்பி ஓட்டம் பிடித்திருக்கிறான் அவனை காவல் ஆய்வாளர் தாம்சன் செய்தியர் துரத்தி பிடித்து விசாரணை நடத்தியதில் ஒருவன் சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பிரவின் என்பதும் இன்னொருவன் சின்மயா நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஏகாம்பரம் தெரியவந்திருக்கிறது மேலும் இவர்கள் இருவரும் திமுகவில் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் சீண்டலில் ஈடுபட்டு காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரையே கதறி அழ வைத்த திமுக நிர்வாகிகள் இருவரையும் கைது செய்த காவலர்கள் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது அவர்களை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல விடாமல் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள், அது மட்டுமல்லாமல் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரான பிரபாகர் ராஜா இச்சம்பவத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் தெரிய வருகிறது. சக பெண் காவலருக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் தொந்தரவுக்கு கூட எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்களாம் உயர் அதிகாரிகள். இதைக் கண்டு பெண் காவலர்கள் பெரும் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் இருக்கிறார்களாம்.
இதுபோல தவறான நடவடிக்கையில் ஈடுபடும் கட்சி பொறுப்பாளர்கள் மீது கட்சியின் தலைவரும் தமிழகத்தின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் அவரே குறிப்பிட்டது போல ஒவ்வொரு நாளும் அவரின் தூக்கத்தை கெடுக்கும் வேளையில் கட்சிக்காரர்கள் ஈடுபடுவார்கள் என்பதை உணர வேண்டும்.
கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது தன் தூக்கத்தை துறப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
