மாநாடு 14 April 2022
சமீப காலங்களில் ஆன்லைன் விளையாட்டுக்களில் சிறுவர்கள் மாணவர்கள் விலைமதிப்பற்ற தங்களது உயிர்களையும் பொருட்களையும் இழப்பது என்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகிவட்டது .இவ்வாறு மாணவர்கள் திசைமாறி போவதற்கு வழிவகுக்கும் வகையில் வகுப்பறைக்குள் இந்த பாடத்திட்டத்ததில் உள்ள இந்த பாடத்தை அனுமதிக்கலாமா? என்று முன்னாள் அமைச்சர் தனது அறிக்கையின் மூலம் கேள்வி எழுப்பி இதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் ஆறாம் வகுப்பு கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடத்திட்டத்தில் சீட்டுக்கட்டுகளைக் கொண்டு ரம்மி ஆட்டத்தை எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து விளக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மாணவர்களை சீரழித்து விடும்.
முழுக்கள் என்ற பாடத்தின் நோக்கம் எண்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குவதாக இருக்கலாம். ஆனால், அதற்கு நல்ல உதாரணங்கள் இருக்கும் நிலையில், ரம்மி ஆட்டத்தை எடுத்துக்காட்டாக வைத்திருப்பது தவறு. இது மாணவர்களுக்கு எண்களை கற்றுத்தராது. ரம்மியைத் தான் கற்றுத் தரும்.
ஆன்லைன் ரம்மி ஆட்டம் இளைய சமுதாயத்தை சீரழித்து தற்கொலைக்கும், கொலைகளுக்கும் வழி வகுத்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்த பாடம் சீரழிவை மேலும் அதிகரிக்கச் செய்யும். மாணவர்களுக்கு நன்மையை போதிக்க வேண்டிய பாடநூல்கள் தீமையை போதிக்கக்கூடாது.