மாநாடு 12 February 2022
நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவாக தந்த அரசாக அ.தி.மு.க. அரசு இருந்தது. தற்போதைய தி.மு.க. அரசு தேர்தலின் போது 505 வாக்குறுதிகளை கொடுத்தது.ஆனால் எதையும் அவர்கள் முறையாக நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சி வெறும் காட்சியாக இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.2,500 வழங்கிய போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் இது போதாது ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றார். இப்போது அவர்கள் பொங்கல் பரிசுத்தொகை 100 ரூபாயாவது கொடுத்தார்களா?தரமில்லாத பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்கள்.
இவற்றையெல்லாம் மக்கள் கண்கூடாகப் பார்த்து வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆகவே, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட இதுவே சரியான தருணம். ஏற்கனவே, பொய்யான வாக்குறுதிகளால் தி.மு.க.வின் முகமூடி கிழிந்து விட்டது. முழுமையாக முகமூடியை கிழிக்க இது நல்ல வாய்ப்பு. இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த தேர்தலில் அ.தி.மு.க. நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறவேண்டும். வெற்றி உறுதி. இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலுடன் கண்டிப்பாக தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்று பேசினார்.