மாநாடு 30 March 2022
திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் துணை ஆட்சியராக பணிபுரியும் சரவணக்குமார் என்பவர் லஞ்சமாக பெற்ற 40 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் காரில் சென்னை செல்வதாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விழுப்புரம் சோதனைச் சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்றில் துணை ஆட்சியர் சரவணக்குமார் மற்றும் அவரது உதவியாளர் மணி ஆகியோர் பெரிய சூட்கேஸ் ஒன்றுடன் வந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் சூட்கேஸை பிரித்து பார்த்த போது கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பணம் மற்றும் காரை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் வைத்து சரவணக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பணம் யாரிடமிருந்து எதற்காக பெறப்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. தீவிர விசாரணைக்கு பின்னரே முழு விபரம் வெளியிடப்படும் என காவல்தறையினர் தெரிவித்துள்ளனர்.