மாநாடு 07 March 2023
பிரபல திரைப்பட இயக்குனர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் நந்தன் திரைப்பட படப்பிடிப்பு தஞ்சை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது, அதில் கலந்து கொண்டிருந்த இயக்குனர், நடிகர் சசிகுமார் அவர் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் அயோத்தி திரைப்படம் தஞ்சாவூரில் ராணிப்பேரடைஸ் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது, இப்படத்தினை மக்களோடு சேர்ந்து, அமர்ந்து பார்ப்பதற்காக திரையரங்கம் வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர் அயோத்தி திரைப்படத்தைப் பற்றி கீழ்க்கண்டவாறு கூறினார்: இந்த அயோத்தி திரைப்படத்தில் சாதி, மதம் கடந்து மனிதம் தான் முக்கியம், சக மனிதனுக்கு உதவ வேண்டும் என்பதை இப்படத்தின் மூலம் சொல்லி இருக்கிறோம், நிஜ வாழ்க்கையில் எல்லாரும் கடந்து வந்த செய்தியை தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம், நல்ல படம் எடுத்தால் எப்போதுமே மக்கள் பேராதரவு தருவார்கள் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக இந்த படத்திற்கு மக்கள் கொடுக்கின்ற ஆதரவு எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்றவர் மேலும் கூறுகையில் தமிழர்கள் நாம் எப்போதுமே வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம், அது இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்றார்.

அயோத்தி படத்தையொட்டி எழுந்த சர்ச்சைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இந்த கதை அனைவரின் வாழ்விலும் நடக்கின்ற செய்தி தான். அயோத்தி என்பது எல்லோரும் கடந்து வந்திருக்கிறோம், இந்த படத்தில் வருவது போன்று துபாயில் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார். இன்னொரு நண்பர் மதுரையிலும் இவ்வாறான சேவை செய்து வருகிறார். அயோத்தி கதை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஒன்றுதான் என்று கூறினார் நடிகர் சசிகுமார், அப்போது திரைப்பட நடிகர் துரை.சுதாகரும் உடன் இருந்தார்.
இந்நிகழ்வில் திரையரங்க நிர்வாகிகள், ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
வந்தாரையெல்லாம் வாழவைத்தும் , ஆள வைத்தும், அழகு பார்த்த தமிழகத்தின் மீது புழுதி வாரி தூற்றுவது போல பொய்யான வீடியோ வெளியிட்டு ஒரு சிலர் உள்நோக்கத்தோடு சில நாட்களுக்கு முன்பு நடந்து கொண்டதன் விளைவாக தமிழ்நாடு ஏதோ வன்முறை பூமி போலவும், இங்கு இருப்பவர்கள் எல்லாம் வன்முறையாளர்கள் போலவும், கட்டமைக்க பார்த்து கயவர்கள் தோற்றுயிக்கிற இந்நேரத்தில் அனைவருக்கும் உதவுபவர்கள் தமிழர்கள், என்பதையும் குறிப்பாக வடமாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்பதையும், தரையில் நடக்கின்ற உண்மைகளை திரையில் கொண்டு வந்து காட்டியிருக்கும் அயோத்தி திரைப்பட குழுவினருக்கு மாநாடு செய்தி குழுமம் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறது .

