மாநாடு 12 December 2022
ஆட்டோவில் இருந்த பெண்ணின் கழுத்து அறுத்து நாலு பேர் கொண்ட கும்பல் அவர் அணிந்திருந்த நகையையும் பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றனர் 3 பேர் தப்பித்து விட ஒருவரை காவலர்கள் துரத்தி பிடித்திருக்கிறார்கள்.
சென்னை மெரினா கடற்கரை மிகவும் புகழ்பெற்றது இந்த கடற்கரையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இரவு நேரங்களில் யாரும் வர முடியாத சூழல் நிலவியது, இரவில் வருபவர்களிடம் வழிப்பறி செய்வதும், பாலியல் அத்துமீறல்களில் ஈடுப்பதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வந்தது அதனை எல்லாம் தற்போது தடுத்து நிறுத்தியதன் காரணமாக எந்நேரமும் மெரினா கடற்கரைக்கு சென்று வர முடியும் என்ற நிலை இருக்கிறது, அந்நிலைக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
மெரினா கடற்கரை சாலையில் இருந்து பட்டினப்பாக்கம் வரை செல்லும் சர்வீஸ் சாலை இருக்கிறது. அதன் அருகே இரவு 1.30 மணி அளவில் ஆட்டோ ஒன்று வந்து நின்று இருக்கின்றது ,அந்த ஆட்டோவில் நடுத்தர வயது பெண்மணி இருந்திருக்கிறார், அப்போது பலத்த மழை பெய்திருக்கிறது,
அந்நேரத்தில் அருகில் மது அருந்தி கொண்டிருந்த நாலு பேர் கொண்ட கும்பல் ,இந்த ஆட்டோவையும், அதிலிருந்த பெண்மணி அணிந்திருந்த நகையையும் பார்த்து இருக்கிறார்கள், பிறகு ஆட்டோவை நெருங்கி வந்த குடிகார கும்பல் பலத்த மழை பெய்கிறது சிறிது நேரம் நாங்கள் ஆட்டோவில் அமர்ந்து கொள்கிறோம் என்று ஆட்டோ ஓட்டுநரிடம் வம்பு செய்திருக்கிறார்கள், ஆட்டோவில் பெண் பயணி இருக்கிறார் எனவே நீங்கள் அமர அனுமதிக்க முடியாது என்று ஆட்டோ ஓட்டுநர் பதிலளித்திருக்கிறார், இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத குடிகார கும்பல் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து இருக்கிறார்கள் ,சிறிது நேரத்தில் அதில் ஒருவன் அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்து ரெண்டு பவுன் நகையையும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கத்தையும் அபகரித்திருக்கிறான், இதுவெல்லாம் ஆட்டோ ஓட்டுநர் சுதாரிப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தேறி இருக்கிறது.
கழுத்து அறுபட்ட பெண் எழுப்பிய அலறல் சத்தத்தில் அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர்கள் கயவர்களை துரத்திருக்கிறார்கள், மூன்று பேர் தப்பித்து ஓடி விட ஒருவன் தப்பிக்க நினைத்து கடலில் குதித்து நீந்தி இருக்கிறான், காவலர்களும் கடலில் குதித்து தப்பிக்க முயற்சித்தவனை பிடித்து, இழுத்து கரைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தியதில் அயனாவரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பதும் ஏற்கனவே இவன் மீது கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்திருக்கிறது. தப்பி ஓடிய 3 பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் தெரிய வந்திருக்கிறது அவர்களையும் பிடிப்பதற்கு தேடும் பணியை காவலர்கள் முடுக்கி விட்டிருக்கிறார்கள், கழுத்து அறுபட்ட பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற பெரும்பாலான குற்றச்சம்பவங்கள் போதை பழக்கத்தினாலேயே நடைபெறுகிறது என்பதற்கு இந்த குடிகாரர்களின் கொலை வெறி தாண்டவமும் மற்றும் ஒரு சாட்சியாக இருக்கிறது.
