மாநாடு 29 May 2022
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 4 லட்சம் ரூபாய் மானியம் பெறுவதற்காக இந்த தகுதி உடையவர்கள் இவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்று தனது செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்:
தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை வாயிலாக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் புதிய திட்டம் கடந்த 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளை நிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளுமின்றி குறித்த நேரத்தில் செய்யவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன. தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்; நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். இந்த மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 விழுக்காடு மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும்.
இந்த மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண் பொறியில் துறை அலுவலகங்களை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம். மாவட்ட ஆட்சியரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இந்த மையம் மானியத்தில் அமைத்துத் தரப்படும். மையங்கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் வேளாண் பொறியியல் துறை கண்காணிப்புப் பொறியாளரால் முடிவு செய்யப்பட்டு பயனாளிகள் மொத்தத் தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ள வேண்டும்.பின்னர் சம்மந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் மையத்தை நேரில் அய்வு செய்து திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத் தொகையை பயனாளியின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும்.
தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சேர்ந்தவர்கள் தஞ்சாவூர் வேளாண் பொறியியல் துறை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மானோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர்- 613 004 என்ற முகவரியிலும்,
கும்பகோணம், அம்மாபே ட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சேர்ந்தவர்கள் வேளாண் பொறியியல் துறை கும்பகோணம் உபகோட்ட உதவிசெயற்பொறியாளர் அலுவலகம்,தொழில் பேட்டை அருகில், திருபு வனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் – 612 103 என்ற முகவரியிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.இதே போல்
பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவா சத்திரம் வட்டாரங்களை சார்ந்த வர்கள் பட்டுக்கோட்டை வேளாண் பொறியியல் துறை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை -614 601 என்ற முகவரியிலும் அணுகி விண்ணப்பத்தை அளித்து பயன் பெறலாம் என்று தெரிவித்திருக்கிறார்.