காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 9 தொகுதிகளில் திமுக 5, விசிக 2, காங்கிரஸ் 1, அதிமுக 1 இடத்தை கைப்பற்றின. அதில் ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் காங்கிரஸின் கே.செல்வபெருந்தகை எம்.எல்.ஏவாக இருக்கிறார்.10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்கு முன்பாக இந்த தொகுதியை காங்கிரஸ் தன் வசமாக்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை கருத்தில் கொண்டு தனது தொகுதிக்கு உட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ செல்வபெருந்தகை கோரிக்கை வைத்திருந்தார்.ஆனால் ஸ்ரீபெரும்புதூரை திமுக எப்படியாவது தங்கள் வசம் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸிற்கு செக் வைக்க திமுக காய்களை நகர்த்தி வருகிறது.
சமீபத்தில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணிமங்கலம் பகுதியில் விஷவாயு தாக்கி இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அழைத்து பி.டி.ஓ அலுவலகத்தில் வைத்து 10 லட்ச ரூபாய் காசோலையை காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை வழங்கியுள்ளார்.
தகவலறிந்த அமைச்சரும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தா.மோ.அன்பரசன் ஆதரவாளர்கள் உடனே சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்றன. எனவே நிதியுதவி வழங்குவது தவறு எனக்கூறி காசோலையை திருப்பி வாங்கி வந்துள்ளனர். ஆனால் அடுத்த சில நாட்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் துப்புரவு தேசிய ஆணைய தலைவர் வெங்கடேசனை வைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக சார்பில் 10 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார்களே? என்று அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்களாம்.
ஆனால் திமுக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை காங்கிரசுக்கு விட தயாராக இல்லையாம்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட மாங்காடு, குன்றத்தூர் நகராட்சிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது. அப்படி கொடுத்தால் அவர்கள் வென்றுவிட்டால் அதன்பின்னர் ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் காங்கிரஸின் ஆட்டம் அதிகமாக இருக்கும்.
நமது கட்சியால் மீண்டும் அப்பகுதியில் எழுச்சி பெற முடியாது என்று திமுக நிர்வாகிகள் முட்டுக்கட்டை போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கேட்கும் நான்கு இடங்களையும் கொடுக்கக்கூடாது என்று கறாராக கூறி வருகின்றனராம்.
இதனால் கூட்டணி பங்கீடு விஷயத்தில் திமுக – காங்கிரஸ் இடையில் விரிசல் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.
இதனை திமுக தொண்டர்கள் இத்தனை ஆண்டுகள் காங்கிரஸ் நம்மால்தான் பலன் பெற்று இருக்கிறதே தவிர அவர்களால் நமக்கு கெட்ட பெயர்தான் எனவே இந்த முறை நமது தலைவர் ஸ்டாலின் அவர்கள் காங்கிரசை அடக்கியே வைப்பார் என்று பேசி வருகிறார்களாம்.