மாநாடு 21 December 2022
திமுக ஆட்சி அமைத்தது முதல் வாயில் வடை சுடும் வேலையை மட்டுமே திறம்பட செய்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் பலவும் விமர்சிப்பதற்கு ஏற்ப பல நிகழ்வுகளும் நாள் தோறும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.


அதில் ஒன்றாக சமீபத்தில் கூட்டுறவு பண்டக சாலையில் அதாவது ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு ஆட்களை நேர்காணல் செய்து தேர்ந்தெடுப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது, அதனையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலா சுப்ரமணியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேர்காணல் 15-12-2022 முதல் 28-12-2002 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.


அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்திற்கான கூட்டுறவு பண்டக சாலையின் விற்பனையாளர் நேர்காணல் கமலா சுப்ரமணியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது, அதற்காக தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு சிற்றூர்களில் இருந்தும், கைக்குழந்தையோடும், வயது வித்தியாசமின்றி, ஏழை எளியோரும், கணவரை இழந்த கைம்பெண்களும், இந்த பணிக்காக விண்ணப்பித்து ஆயிரக்கணக்கானவர்கள் நேர்காணல் ஆரம்பித்த தேதியில் இருந்து இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் நேர்காணலுக்கு வருபவர்களை சாலையின் ஓரத்தில் வெயிலில் நிற்க வைத்திருக்கிறார்கள் என்றும் குடிப்பதற்கு குடிநீர் கூட வெளியே நிற்பவர்களுக்கு வைக்கப்படவில்லை என்றும் பள்ளியின் வெளிப்புற கதவை அடைத்து வைத்து ஏதோ அகதிகளை நிற்க வைப்பது போல நிற்க வைக்கிறார்கள் என்றும் தொடர்ந்து நமது மாநாடு இதழுக்கு தகவல்கள் வந்து கொண்டே இருந்தது.
இன்று என்ன நடக்கிறது என்பதை நேரில் காண்பதற்காக நாமே நேர்காணல் நடைபெறும் பகுதிக்கு சென்று இருந்தோம், அங்கு வெளிக்கதவு அடைக்கப்பட்டிருந்தது, ஏராளமான பெண்களும், வயது வித்தியாசம் இன்றி ஆண்களும் வெளிக் கதவின் வெளியே சாலையிலேயே நின்று கொண்டிருந்தார்கள் எப்போது வந்தீர்கள் என்று கேட்டபோது சிலர் 11 மணிக்கெல்லாம் வந்து விட்டோம் என்று கூறினார்கள் .


சம்பந்தப்பட்டவர்கள் பள்ளியின் உள்ளே கூடாரம் அமைத்தாவது வந்தவர்களை முதலில் மதித்து அமர சொல்லி பிறகு நேர்காணல் செய்ய வேண்டும், அதேபோல வருகிறவர்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்து தர வேண்டும்.இது ஒன்றையும் செய்ய முடியாத நிலையில் வக்கற்று நிற்கிறது நிர்வாகம் என்றால் அதையும் வெளிப்படையாக நமது இதழில் கொடுக்கப்பட்டிருக்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் வெளியிட தயாராக இருக்கிறோம். இவ்வளவு கடினப்படுத்தி நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்படுபவர்களிடம் உள்ளடி வேலை செய்து பணம் ஏதும் பெறாமல் இருக்க வேண்டும் சம்பந்தப்பட்டவர்கள். இருப்பார்களா? மேற்படியாளர்கள்.
