மாநாடு 16 February 2023 பன்னெடுங்காலமாக குருவிகள் கூடு கட்டி வாழ்வதைப் போல சிறிய வீடுகளை கட்டி வாழ்ந்து வந்த ஏழை எளிய மக்களை காலி செய்ய சொல்லி நீதிமன்றத்தின் உத்தரவோடு சென்னை போன்ற பல்வேறு இடங்களில் வாழ்வதற்கு வேறு வாழ்விடம் இல்லாதவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருவதை தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிமாக கண்ணால் கண்டிருக்கிறோம் , செய்திகள் மூலம் அறிந்திருக்கிறோம். சென்னையில் ஒரு தனி மனிதன் போட்ட வழக்கு ஏற்று நீதிமன்றம் வீடுகளை இடிக்க ஆணை பிறப்பித்ததையும் அதனையொட்டி அம்மக்கள் நடத்திய போராட்டத்தையும் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததை யாரும் இதுவரை மறந்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருப்பந்துருத்தி கிராமங்கள் வழியாக திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் புறவழிச்சாலை அமைப்பதற்காக 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு அறிவிப்பானை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தப் புறவழிச் சாலை விளைநிலங்களின் நடுவே விளைநிலங்களை அழித்து போடப்பட்டு வருவதால் விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் இறங்கினார்கள்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் என்பவர் இது சம்பந்தமாக பொதுநல வழக்கு ஒன்றை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுத்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் திருவையாறு போக்குவரத்து நெரிசல் உள்ளதால் புறவழிச் சாலை அமைப்பதற்காக மனக்கரம்பை அரசூர் காட்டுக்கோட்டை கண்டியூர் என திருவையாறு ஒட்டியுள்ள கிராமங்களில் 6.74 கிலோ மீட்டர் தூரத்திற்கு 191.34 கோடி மதிப்பீட்டில் புறவழிச் சாலை அமைக்க முடிவு செய்து விவசாய நிலங்களின் நடுவே விவசாய நிலங்களை அழித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வயலில் செம்மண், கிராவல் கொட்டி பரப்பப்பட்டுள்ளது, அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது அது மட்டுமல்லாமல் விவசாய நிலங்களும் அழிக்கப்படுகிறது எனவே புறவழிச் சாலை அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் இத்திட்டத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் கோரப்பட்டிருந்தது,

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி அமர்வில் விசாரணைக்கு வந்தது , அதில் புறவழிச் சாலை குறித்த அறிவிப்பானை வெளியிட்ட போதே ரத்து செய்வது குறித்து மனு தாக்கல் செய்திருக்க வேண்டும், அறிவிப்பானை வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன, தற்போது பணிகள் தொடங்கப்பட்டு , பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நேரத்தில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க இயலாது. அதேசமயம் வழங்கப்படும் இழப்பீட்டில் குறைகள் இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்கள்.

இதைப் பற்றி பொதுநல வழக்கு தொடுத்திருந்த செந்தில்நாதனிடம் பேசினோம், இந்தத் தீர்ப்பு சம்பந்தமாக நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டோம் இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
வீடியோ பார்க்க இந்த லிங்கை தொடுங்கள்:https://youtu.be/Y6Qe2Fk4WrQ
