மாநாடு 25 March 2022
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் இந்த வேலை நிறுத்தத்தில் தமிழ்நாட்டில் 50 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அரசு ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த துறை ரீதியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
28, 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வராமல் போராட்டத்தில் கலந்துகொண்டால் அன்றைய தினம் சம்பளம் வழங்கப்படமாட்டாது. என மின்சாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அந்த ஊழியர்களின் விவரங்களை சேகரிக்குமாறு அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக போக்குவரத்து துறையும் இதே அறிவிப்பை வெளியிட்டது. மார்ச் 28, 29 ஆகிய தேதியில் எந்த விதமான விடுப்பும் அனுமதிக்கப்பட மாட்டாது. ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. பணிக்கு வரவில்லை எனில் பணிக்கு வரவில்லை என்று பதிவு செய்து சம்பளம் பிடித்தம் செய்யப்படும். பணிக்கு வருகை தராமல் இருக்கும் பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மார்ச் 28, 29 ஆகிய தேதியில் எந்த விதமான விடுப்பும் அனுமதிக்கப்பட மாட்டாது. விடுப்பு எடுத்தால் 10.30 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். அன்றைய தினம் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.