மாநாடு 14 July 2022
திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் அதிமுகவையும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் அதில் குறிப்பிட்டப்பதாவது : தற்போது தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் ஒருமுறை தனக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என்று நம்பி ஏமாந்துபோன அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேவையில்லாமல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பது மிகவும் கண்டிக்கத் தக்கதாகும் .
திமுகவில் எங்கே ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகிவிடுவாரோ என்ற பயத்தில் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனை அவசர அவசரமாக மீண்டும் தங்களுடன் இணைத்துக் கொண்டதை தமிழக மக்கள் கைகொட்டி எள்ளி நகையாடுகிறார்கள்.வேலை இல்லாமல் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் திரு.ஆர்.எஸ்.பாரதி கடந்த வாரத்தில் வருமானவரித் துறை தனிப்பட்ட இரண்டு தொழில் அதிபர்களின் நிறுவனங்களில் மேற்கொண்ட சோதனையைப் பற்றி குறிப்பிட்டு இதற்காக மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிக்காதது ஏன் என்று கேட்டிருக்கிறார்.
வருமானவரித் துறை தனிப்பட்ட நிறுவனங்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கெல்லாம் எந்த அரசியல் கட்சியாவது மத்திய அரசைக் கண்டித்து போர்க்குரல் எழுப்பி இருக்கிறதா ? திமுகவைச் சேர்ந்த ஒரு சில அமைச்சர்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி மத்திய அமலாக்கத் துறை விசாரணைக்காக சம்மன் அனுப்பி உள்ளது என்று செய்திகள் வந்துள்ளன நேரில் ஆஜராகாமல் வாய்தா வாங்கிக் கொண்டு காலம் தாழ்த்தி வரும் அந்த அமைச்சர்களை பற்றி ஆர்.எஸ்.பாரதி வாய் திறக்கத் தயாரா?
விசாரணைக்கு சம்மன் அனுப்பிய மத்திய அமலாக்கத் துறையையும், மத்திய அரசையும் கண்டித்து திமுக வாய் திறந்திருக்கிறதா ? இதே போல் பல திமுக அமைச்சர்கள் மீது நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள ஊழல் வழக்குகளையும் விரைந்து நடத்த திரு.ஆர்.எஸ் .பாரதி அவர்கள் இந்த விடியா அரசை கேட்டுக் கொள்வாரா? இந்த விஷயத்தில் மவுன சாமியாராக இருக்கும் திமுக தலைமையைப் பார்த்தால் , சம்பந்தப்பட்ட அனைவருமே சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது உண்மையாகவில்லையா? தன் முதுகைப் பார்க்க முடியாதவன், அடுத்தவர்கள் முதுகைப் பார்த்து அழுக்கிருப்பதாக புலம்பித் திரிவது வேடிக்கையாக இருக்கிறது .
இந்த விடியா அரசு ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் சென்னை அண்ணாசாலையில் உள்ள டி.வி.எஸ் குழும சொத்து முதல் கேளம்பாக்கம் வரையும் ,செங்கல்பட்டில் இருந்து திருநெல்வேலி மற்றும் கோவை வரையும் பல்லாயிரக்கணக்கான நிலங்களை ஜி.ஸ்கொயர் என்ற நிறுவனம் கபளீகரம் செய்து வருகிறது என்று நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றனவே , அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் யார் யார் என்பதை திரு .ஆர். எஸ். பாரதி சொல்லத் தயாரா ?
இந்த ஜி.ஸ்கொயர் சம்பந்தப்பட்ட செய்திகள் வெளி வந்தவுடன் அந்தக் கம்பெனியின் பெயரையே மாற்றி விஞ்ஞான ரீதியான தகிடுதத்தத்தைப் பற்றி திரு.ஆர்.எஸ்.பாரதி விளக்குவாரா ? இந்த விடியா அரசில் பெரும்பாலான மந்திரிகள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அரசியலில் முதன் முதல் பதவிகளுக்கு வரும்போது அவர்களது குடும்பச் சூழ்நிலை என்ன ? சொத்து விவரம் என்ன ? தற்போது அவர்களின் சொத்து விவரம் என்ன ?அவர்கள் எத்தனை ஆயிரம் கோடிகளுக்கு அதிபதிகள் என்பதையும் , அவர்கள் நடத்தக் கூடிய பல்வேறு நிறுவனங்களில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களும் , அவற்றைப் பாதுகாக்க மைல் கணக்கில் நீண்டுள்ள காம்பவுண்ட் சுவர்களின் நீளம் , அகலம் பற்றியும் திரு. ஆர்.எஸ்.பாரதி விளக்கத் தயாரா ?
அன்னக் காவடிகளாக நாட்டிலே அலைந்து திரிந்த திமுகவைச் சார்ந்த பலர் இன்றைக்கு அரபு நாட்டு சுல்தான்கள் போல் வாழ்ந்து வலம் வந்து கொண்டிருப்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். தான் திருடி பிறரை நம்பாள் என்பது போல் ஊழலிலேயே ஊறித் திளைத்த கட்சியைச் சார்ந்த ஒருவர்,காமாலை கண்ணுடையவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும் நபர் ஒருவர் பிதற்றுவது போல் , தூய்மை உள்ளம் கொண்ட பரிசுத்தமான , மக்கள் சேவையை முன்னெடுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை களங்கப்படுத்த முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது .
திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தின் பொறுப்பில் இருந்த போது பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகப் புகார்கள் வந்ததும் , காவல் துறையால் விசாரிக்கப்பட்டதும் எல்லோரும் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பில் அடுத்த வீட்டில் எட்டிப் பார்க்கிறார். இந்தப் போக்கைக் கைவிடாவிட்டால் இன்றைக்கு தான் தப்பித்ததாக அவர் நினைத்துக் கொள்ளலாம் . ஆனால் வீட்டு வசதி கூட்டுறவு சங்க ஊழல் அவரது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருப்பதை மறந்துவிடக் கூடாது.
உப்பைத் தின்ற திரு .ஆர். எஸ். பாரதியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தண்ணீர் குடிக்க வைக்கும் காலம் வரும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
25 ஆண்டுகளுக்கு முன்பு திரு. ஆர்.எஸ்.பாரதி எப்படி இருந்தார் ? இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்பது அவரது அடுத்த வீட்டுக்காரர்களுக்கே நன்கு தெரியும். ஊருக்கு உபதேசம் செய்வதை விட்டுவிட்டு அவரது கட்சியை சீர்திருத்தும் பணியில் திரு .ஆர். எஸ். பாரதி ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.