மாநாடு 18 July 2022
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி நான்கு நாட்கள் பெற்றோர்கள் ,உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் அமைதியாக அறவழியில் போராட்டம் நடைபெற்று வந்தது இந்நிலையில் நேற்று போராட்டம் கலவரமாக மாறியது.
இதில் பள்ளியின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, இதனைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல்துறையின் தலைமை அதிகாரி உட்பட மேல்மட்ட அதிகாரிகள் அனைவரும் நிகழ்வு இடத்திற்கு வந்தார்கள்.
மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது, சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று வேதியில் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நேற்று நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.
இதனிடையே, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக விசாரணையை சிபிசிஐடி காவலர்கள் தொடங்கியுள்ளனர். திருவண்ணாமலை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்ட்டுள்ளார். விழுப்புரம் சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. கோமதி தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவலால் வன்முறை ஏற்பட்டுள்ளது. வாட்ஸ் அப் மூலம் தவறான தகவல்களை பரப்பி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.மாணவர்கள் என்ற பெயரில் பள்ளிமுன் கூடிய சில விஷமிகள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.கலவரத்தை தூண்டியவர்கள் யார் என்பதை கண்டறிய குழு அமைக்கப்படும். கலவரத்தை முன்னின்று நடத்தியவர்கள் யார், ஈடுபட்ட நபர்கள் யார் என்பதை அந்த குழு கண்டறியும். யார் தவறு செய்திருந்தாலும் உரிய தண்டனை பெற்று தரப்படும். கைது செய்யும்போது அரசியல் உள்நோக்கம் எதுவும் இன்றி அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.