மாநாடு 25 July 2022
போக்குவரத்து தொழிலாளர்களின் 14 வது ஊதியஒப்பந்தம், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளில் தமிழக முதல்வர் தலையிட்டுதீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி போக்குவரத்து ஏ ஐ டி யூ சி சார்பாக இன்று மாநிலம் தழுவிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு இன்று காலை நடைபெற்ற போராட்டத்தில் கீழ்க்கண்டவாறு வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு கடந்த 1.9.2019 அன்று 14வது ஊதிய ஒப்பந்தம்பேசி அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இடைக்கால நிவாரணம் 1000 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்று, தற்போது மூன்றாவது கட்டமாக பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.14வது ஊதிய ஒப்பந்தம் முடிய இன்னும் 45 தினங்களே உள்ளன. அடுத்த15 வது ஒப்பந்தம் 1.9.2022 ல் பேசப்பட வேண்டும். இந்நிலையில் பே மேட்ரிக்ஸ் முறையில் அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பள உயர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்,

தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய பென்சன் திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும், கடந்த 2015 முதல் உயர்ந்துவிட்ட பழைய புதிய அகவிலைப்படி உயர்வு 82 மாத காலம் நிலுவையில் உள்ளதை உடனடியாக அறிவித்து அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்றவர்கள் பணப்பலன்கள் உடனே வழங்க வேண்டும், தற்போது காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் டெண்டர் விட்டிருப்பது ஏற்புடையதல்ல ஒப்பந்தத்திற்கு மாறானது எனவே ஒப்பந்த முறையில் ஆள் எடுப்பது கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகள் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் போக்குவரத்து துறை அமைச்சர் முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவு அறிவிப்பதாக தெரிவித்து சென்றுள்ளார்.

பேச்சு வார்த்தை முடிவிற்கு வராததால் தொழிலாளர்கள் வெறுப்பிலும், கோபத்தின் உச்சியிலும் உள்ளனர். இந்த நிலைமைகளில் தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டிய அவசர அவசியம் குறித்து ஏஐடியூசி சம்மேளனம் சார்பில் ஜீலை 20 ம் தேதி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஏஐடியூசி சம்மேளனம் அளித்துள்ள கடிதம், பேச்சு வார்த்தையில் கூட்டமைப்பு முடிவுகளில் இனியும் காலம் தாழ்த்தாது தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பேசியதாவது: கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது நாங்கள் போராடினோம்.அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு வாக்குறுதி கொடுத்தார், அடுத்து அமையப்போகும் நமது திமுக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று பிரச்சனைகள் 100 நாட்களில் தீர்த்து வைக்கப்படும் என்றார்.

ஆனால் ஓராண்டாகியும் இதுவரை எந்தவித தீர்வும் காணவில்லை, இதன் காரணமாக போக்குவரத்து தொழிலாளர்கள் மிகவும் கோபத்தின் உச்சியில் இருக்கிறார்கள் .தாங்கள் பல ஆண்டுகளாக உழைத்து சம்பாதித்து கொடுத்த பணத்திலிருந்து எங்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதியங்கள் மேற்கொண்டு இந்த அரசும் தர மறுக்கிறது ,வெறும் கையோடு ஓய்வு பெற்ற தொழிலாளியை வயித்தெரிச்சலோடு வீட்டுக்கு அனுப்புகிறது.
போக்குவரத்து துறை அரசுடமையாக்கப்பட்ட போது இருந்த வாகனங்கள் எத்தனை? அதற்காக இருந்த பணிமனைகள் எத்தனை ?இப்போது இருக்கின்ற, இவ்வளவு இடங்களும் ,இவ்வளவு பேருந்துகளும் எங்கள் ஒவ்வொருவரின் உழைப்பினால் உருவாக்கப்பட்டது ,அப்படி இருந்தும் எதுவுமே தெரியாதது போல எங்களை வஞ்சிப்பது ஏற்புடையதல்ல,
போக்குவரத்து துறை அமைச்சர் கூறும் போது பணம் இல்லை என்று சாக்குப் போக்கு சொல்கிறார், வெளியில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பணம் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் இருக்கலாம் ஆனால் உழைத்துக் கொடுத்த எங்களுக்கு உறுதியாக தெரியும் போக்குவரத்து துறையில் பணம் இருக்கிறது தமிழக அரசிடமும் பணம் இருக்கிறது ஆனால் எங்களுக்கு சேர வேண்டிய உரிமை தொகையை கொடுப்பதற்கு ஏன் இவர்களுக்கு மனம் இல்லை என்பது மட்டும் எங்களுக்கு தெரியவில்லை.
பணம் இல்லை என்று சொல்பவர்களா 134 அடி உயரத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக பேனா சின்னத்தை கடலுக்குள் 81 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடுகிறார்கள். தேர்தலின் போது ஸ்டாலின் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நம்பி தெருத்தெருவாக ,ஊர் ஊராக சென்று வாக்கு சேகரித்தோம், நாங்களும் வாக்களித்தோம், அதன் காரணமாக தான் திமுக அமோக வெற்றி பெற்று இன்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கின்றார். கெஞ்சி கெஞ்சி திமுகவிற்காக வாக்கு கேட்ட நாங்கள் இன்று திமுகவிடம் எங்கள் உரிமைக்காக கெஞ்சி நிற்கின்றோம் உழைக்கும் தொழிலாளர்கள் கோபத்தின் உச்சியில் இருக்கிறார்கள் இவை அனைத்தையும் புரிந்து கொண்டு முதலமைச்சர் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் படி உடனடியாக இந்த பிரச்சனையில் தீர்வு காண வேண்டும். தேர்தலுக்கு முன்பு மு. க. ஸ்டாலின் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சருக்கு நினைவுபடுத்த ஒவ்வொரு முறையும் அமைச்சர்களைக் கொண்டு முயற்சி செய்து வருகிறோம், என்றார்கள் போக்குவரத்து தொழிலாளர்கள்.
வீடியோ லிங்க் :https://youtu.be/OlKDoJBI99s
