மாநாடு 23 April 2022
நெல்லை சுத்தமல்லி அருகே பழவூரில் கோயில் கொடை விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம், முத்துசாமி மகன் ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆறுமுகம் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக அபராதம் விதித்தது குறித்து ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளார்.இதில் படுகாயமைடந்த பெண் காவலரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புக்கு நின்ற பெண் காவலருக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். இந்த நிலையில், பெண் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில் நெல்லை பழவூரில் பெண் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா, அபராதம் விதித்ததற்காக கழுத்தறுக்கப்பட்ட சம்பவம், கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையும் காவலர்கள் தங்களை தற்காத்து கொள்ள புதிய யுக்திகளை கையாளுவதற்கு பயிற்சிகளையும் அளிக்க வேண்டும் எனவும், இதற்கும் கமிட்டி போட்டு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவலர்களை காக்க வேண்டும் எனவும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்
