Spread the love

மாநாடு 17 April 2022

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் , தனியார் மண்டபத்தில் 1 ஆண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் முதலமைச்சர் கலந்துரையாடும் நிகழ்ச்சி காணொளி வாயிலாக நடைப்பெற்றது. மின்வாரிய செயற்பொறியாளர் கிருபாகரன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

காணொளி காட்சி மூலம் நடைப் பெற்ற முதல்வரின் நிகழ்ச்சி நிறைவிற்கு பின்பு, மேடையில் ஒசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, ஒசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ஆனந்தய்யா உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

ஒசூர் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பிரகாஷ் அவர்கள் பங்கேற்காத நிலையில், அவரின் உடன்பிறந்த அண்ணன் சந்திரன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதோடு, ஓசூர் மாநகராட்சி 16, 13 மற்றும் 6வது வார்டு திமுக பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷின் சகோதரர் என அரசு விழா ஏதோ குடும்ப விழா போன்று நடைபெற்றது. மேடையில் அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினரின் அண்ணனுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தியுள்ளார்கள்.

அரசு விழா என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மட்டுமே மேடையை அலங்கரிக்க வேண்டிய நிலையில் சட்டமன்ற உறுப்பினரின் அண்ணனும், பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவரது கணவர்களும் பங்கேற்பதும் எந்த விதத்தில் நியாயம் என விவசாயிகள் விழாவில் பங்கேற்ற விவசாயிகள் சிலர் முனுமுனுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண் மேயர், கவுன்சிலர் உள்ளிட்ட பிரதிநிதிகள் தங்களது தந்தை, கணவர், சகோதரர் என யாரையும் அலுவல் பணிகளில் தலையிட அனுமதிக்கக் கூடாது எனவும், அவ்வாறு அனுமதித்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், முதலமைச்சரின் எச்சரிக்கை ஓசூரில் காற்றில் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

31090cookie-checkமுதல்வரின் பேச்சுக்கு கட்டுப்படாத சட்டமன்ற உறுப்பினர்கள்

Leave a Reply

error: Content is protected !!