மாநாடு 18 November 2022
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், வெட்டுக்குத்துக்கள், படுகொலைகள், நாள்தோறும் நடந்து கொண்டே தான் இருக்கிறது , அது மட்டுமல்லாமல் சமீபகாலமாக தமிழ்நாட்டில் மீண்டும் வெடிகுண்டு கலாச்சாரங்கள் தொடர ஆரம்பித்திருக்கிறது இது போன்ற சம்பவங்கள் சாமானிய பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.
தமிழகத்தின் தலைநகர் சென்னை குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த வெங்கடேசன். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பூட்டு சாவி சின்னத்தில் நின்று வென்று ஊராட்சி மன்ற தலைவராக இருந்திருக்கிறார்,
இவரும் வார்டு உறுப்பினர் சத்யா என்பவரும் நேற்று இரவு மாடம்பாக்கம் அருகே உள்ள ஆதனூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள், அப்போது மறைந்திருந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி இருக்கிறது, இதனால் தடுமாறி கீழே விழுந்த ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனை சுற்றி வளைத்த கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கிறது, தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் காவலர்கள் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள், தப்பி ஓடிய கும்பலை தேடி வருவதாக கூறப்படுகிறது, இச்சம்பவத்தால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டிருக்கிறது.