மாநாடு 4 August 2022
நாட்டின் நம்பிக்கையாக இருந்து வளர வேண்டிய பல மாணவ மாணவியர், இளைஞர்கள் போதையால், பாதை மாறி செல்லும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, முன்பெல்லாம் மது அருந்துவது கேவலம் என்று நினைக்கப்பட்டு வந்த நமது தமிழ் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி தவறான வழியில் பயணிக்கிறது,
அதாவது மது அருந்தலாம் அளவோடு அருந்த வேண்டும் என்றும் கள்ளச்சாராயம் குடிக்க கூடாது என்றும் பல்வேறு போதனைகள் போதிக்கப்பட்டு வருகிறது. அரசே மது விற்பனையை ஏற்று நடத்தி மது பாட்டிலில் மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று எழுதி அந்த மதுவை அரசை விற்பனை செய்வது கேவலத்திலும் கேவலம், அரசு அதற்கு விளக்கம் கொடுக்கும்போது அரசு மது கடை நடத்தவில்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்கிறார்கள். அவர்கள் தற்போது பெருகி வரும் பல போதைக்கும் என்ன காரணம் சொல்வார்கள்? ஒரு வேலை இதையும் கள்ளச் சந்தையில் இருந்து ஒழிப்பதற்காக அரசே ஏற்று நடத்தும் என்று சொல்வார்களா?
சமூகத்தில் மது தடுக்கப்பட வேண்டும், ஒழிக்கப்பட வேண்டும் என்றால் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது அரசின் டாஸ்மாக்கை தான் அதேபோல தமிழக காவல்துறை நினைத்தால் ஒரே நாளில் கள்ளச்சாராயத்தை தடுத்து ஒழித்து விட முடியும் அந்த வல்லமை தமிழ்நாடு காவல்துறைக்கு உள்ளது. அதற்கு எந்த அரசியல் கட்சிகளின் பின்புலமும் குறுக்கிடும் இருக்கக் கூடாது.
இந்நிலையில் எந்நேரமும் போதை தரும் மாத்திரையை விற்பனை செய்த இளைஞரை அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய காவலர்கள் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இவர்களைப் பார்த்த இளைஞர் திடீரென ஓட்டம் பிடித்திருக்கிறான் ,அவனை விரட்டி பிடித்த காவலர்கள் விசாரணையில் ஈடுபட்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவனிடம் நடத்தி விசாரணையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள நெசவாளர் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பதாகவும், 25 வயது உடைய தீபக் ராஜ் என்பதும் இவன் மதுரையை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்திருக்கிறது, மேலும் விசாரணையில் இவனிடம் 104 மாத்திரைகள் இருந்ததாக கூறப்படுகிறது அந்த மாத்திரைகள் எந்நேரமும் மயக்கத்திலேயே உட்கொள்பவர்களை வைத்திருக்கும் என்று அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மாத்திரைகளை பள்ளி மாணவர்களுக்கு இவன் விற்றதாக கூறப்படுகிறது, இந்த மாத்திரைகளை ஆன்லைனில் இருந்து வாங்கி விற்பனை செய்ததாக தீபக் ராஜ் வாக்குமூலம் கொடுத்துள்ளான், அவனிடம் இருந்த 104 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்த காவலர்கள் இந்த மாத்திரையை யார் யாருக்கெல்லாம் இவன் தொடர்ந்து விற்பனை செய்துள்ளான் அதனால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த தகவல் வெளியே தெரிந்தவுடன் சுற்றுவட்டார பொதுமக்களும் பெற்றோர்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதுபோன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும், அதற்கு அரசை ஏற்று நடத்தும் டாஸ்மாக் கடையை முதலில் முழுவதுமாக இழுத்து மூடி முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
