மாநாடு 13 August 2022
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் சங்க அலுவலகத்தில் தலைவர் மல்லி ஜி.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற பணிகள் குறித்து பொதுச்செயலாளர் பி.அப்பாத்துரை பேசினார் . ஏ ஐ டி யூ சி மாநில முடிவுகள் குறித்து மாநில செயலாளர் சி.சந்திரகுமார், போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை குறித்து சம்மேளன துணைத் தலைவர் துரை.மதிவாணன் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், பொருளாளர் தி.கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்க கௌரவ தலைவர் ஜெ.சந்திரமோகன், நிர்வாகிகள் கே.சுந்தரபாண்டியன், ஏ.சுப்பிரமணியன், அ.இருதயராஜ், டி.தங்கராசு, பி.குணசேகர், அருள்தாஸ், பொறியாளர் முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . முன்னதாக பொருளாளர் எஸ்.பாலசுப்பிர மணியன் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் துணைத் தலைவர் எம். மாணிக்கம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சுமார் 86,000 ஓய்வு பெற்றவர்கள், அவர்களை சார்ந்து பல்லாயிரக்கணக்கான குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் இதுநாள் வரை அறிவிக்கப்படவில்லை. அரசு ஓய்வூதியர்களுக்கு நடைமுறையில் உள்ளது போன்று மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்த வேண்டும், திமுக தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் , ஊதிய ஒப்பந்த பலன்கள் ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைப்படி 87 மாத கால உயர்வு அறிவித்து ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.