மாநாடு 13 December 2022
ஊரு விட்டு ஒதுக்கி வைத்து 20, ரூபாய் லட்சம் தண்டம் விதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 8பேர் தீக்குளிக்க முயற்சி .
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கிராமத்தை சேர்ந்த மீனவர் லட்சுமணன் , இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யம் அருகே உள்ள வெள்ள பள்ளம் கிராமத்தில் தங்கி மீன் பிடி தொழில் செய்திருக்கிறார். ஆனால் பூம்புகார் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் வேறு எந்த ஊர்களிலும் தங்கி மீன்பிடித் தொழில் செய்யக்கூடாது என்பது கிராம கட்டுப்பாடு என்று கூறப்படுகிறது.
கிராம கட்டுப்பாட்டை மீறியதால் லட்சுமணன் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து 20 லட்சம் ரூபாய் தண்ட மிதித்து கிராம பஞ்சாயத்து தீர்ப்பளித்து இருக்கிறது, மேலும் இவர்களின் குடும்பத்தோடு ஊரில் உள்ளவர்கள் யாரும் பேசக்கூடாது என்றும் மீறி பேசினால், பேசிய குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்படும் என்றும் தண்டோரா போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாறு ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லட்சுமணன் குடும்பத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்ட போதும் மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் நாங்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றோம், எங்கள் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் கூட கொடுக்க மறுக்கிறார்கள் என்று கூறி நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனோடு வந்த லட்சுமணன் குடும்பத்தினர் மனைவி , இரண்டு மகன்கள், மருமகள்கள் , பேரக்குழந்தைகள் என 8 பேரும் மண்ணெண்ணையை தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்கள், காவல் பணியில் இருந்த காவலர்கள் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி எரிந்து இவர்களை தடுத்து நிறுத்தினார்கள், அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் தர்ணாவில் ஈடுபட்ட லட்சுமணனிடம் காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதையொட்டி லட்சுமணன் குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டு இருக்கிறார்கள் , இதனால் அந்தப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
