Spread the love

மாநாடு 3 March 2022

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடைபெற்றது அதில் மதுரை மாவட்டம் டி.கல்லுபட்டி பேரூராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 10 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேட்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளை பெற்றனர்.

இதனால் குலுக்கல் மூலம் வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இது சம்பந்தமாக தேர்தல் அதிகாரி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க கோரி பழனிச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, குலுக்கல் நடந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வீடியோ பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டன. அதை பார்வையிட்ட நீதிபதிகள், மனுதாரரை வெற்றி பெற்றவராக அறிவித்திருக்க வேண்டும் எனவும், தேர்தல் முடிவை மாற்றியது நிரூபணமாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் தேர்தலை உயர் நீதிமன்றம் கண்காணித்த நிலையில், தேர்தல் அதிகாரி எப்படி அரசியல் கட்சி சார்பாக செயல்பட்டார் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மாநில தேர்தல் ஆணையம் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்தனர்.

மாநில தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டிருக்க வேண்டும் எனக் கூறி திருத்திய முடிவை வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரியை வரும் திங்கட்கிழமை மார்ச்7ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு, விசாரணையை அன்றைக்கு ஒத்தி வைத்தனர்.அதே போல வீடியோ பதிவை நகல் எடுத்து பாதுகாக்கவும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

22500cookie-checkதிமுக கவுன்சிலரில் ஒருவர் அவுட்டா?உயர்நீதிமன்றம் அதிரடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!