மாநாடு 9 May 2022
மாதா பிதா குரு தெய்வம் என்று வாழ்வியல் நல் நெறி கல்வியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து நல்ல சமூகத்தை உருவாக்கி தந்தார்கள் நம் முன்னோர்கள் ஆனால் காலப்போக்கில் கல்வி என்பது வியாபாரமான தன் காரணமாக காசு ஒன்றே குறிக்கோள் என்று பொருளாதாரம் ஈட்டும் கல்வி முறையையே கற்பிக்கப்படுகிறது அதன் காரணமாக சமூகமே சீர் கெட்டுப் போய் இருக்கின்றது என்பதை ஒவ்வொரு நாளும் செய்திகளின் வாயிலாக அறிய முடிகிறது சமூக வலைத்தளங்களில் வரும் சில காணொளிகள் சமூக ஆர்வலர்களை கவலை கொள்ள வைத்திருக்கிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசுப் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் மாணவர்கள் ஆசிரியரிடம் தவறாக மாணவர்கள் நடந்து கொண்ட விதம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றம் செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வரும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் இத்தகைய நடவடிக்கை, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் அரசுக்கும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று பாமக உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பதில்:
வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்தி விட்டே, பின் பாடங்கள் நடத்தப்படும். இன்றைய கால கட்டத்தில் கவனச்சிதறல்கள் அதிகரித்துள்ளது. மன அழுத்தத்தில் இருந்த குழந்தைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை கூறுவது தவறு. பள்ளிகள், பெற்றோர்கள்,அரசு ஆகியோருக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், மாற்றுச் சான்றிதழ் (TC) நடத்தை சான்றிதழில் (Conduct Certificate) என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். மேலும், பள்ளிகளுக்கு மாணவர்கள் கைப்பேசி கொண்டு வரப்படுவது முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
