மாநாடு 10 May 2022
தஞ்சாவூர் மாநகராட்சி நகராட்சியாக இருந்த காலம் தொட்டு பல ஆண்டுகளாகவே வருமானம் ஈட்டுவதில் பின் தங்கியிருந்தது அதன் காரணமாக நகராட்சி ஊழியர்களுக்கு கூட சம்பளம் போட முடியாத நிலையில் இருந்தது என்பதை செய்திகளின் வாயிலாகவும் அனைவரும் அறிந்ததே.
2015ஆம் ஆண்டு வாக்கில் எழில்மிகு நகரமாக மாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தஞ்சாவூரும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து எழில்மிகு நகரத்திற்கு உண்டான கட்டமைப்பை உருவாக்கும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபடத் தொடங்கியது என்றாலும் கூட அதனை திறம்பட எந்தவித சமரசமும் இன்றி செய்தவர் தற்போது மாநகராட்சி ஆணையராக இருக்கும் சரவணகுமார் என்பதை பொதுமக்கள் நன்கு அறிவர்.
இவரின் நடவடிக்கையால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசுக்கு வரியும் கட்டாமல் வாடகையும் சரிவர கட்டாமல் இருந்த கட்டிடங்களை கண்டறிந்து அவைகளை வசூல் செய்தார் அதுமட்டுமல்லாமல் அரசாங்க இடங்களை சில அரசியல் கட்சிகளின் பின் புலன்களோடு தனியார்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த இடங்களை அதிரடியாக மீட்டு எடுத்ததன் மூலம் மாநகராட்சிக்கு சொந்தமான சொத்துகள் 100 கோடிக்கு மேல் அரசுக்கே மீண்டும் வந்து சேர்ந்தது.
அதுமட்டுமில்லாமல் நகராட்சி கடைகளை மிகக் குறைந்த வாடகைக்கு எடுத்து அதனை உள்வாடகைக்கு விட்டு பலர் சம்பாதித்து வந்தனர் அதனை கலையும் படியாக மாநகராட்சி கடைகளை பொது ஏலம் விட ஏற்பாடு செய்தார் அந்த ஏலத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக பல அரசியல் கட்சிகளின் துணைகொண்டு பல்வேறு தடைக்கற்களை போட்டார்கள் மேலும் ஏலம் விட்ட பிறகும் கூட கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட கோரி நீதிமன்றம் வரை சென்றார்கள் அதனையும் லாவகமாக எதிர்கொண்டார் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார்.அதன் விளைவாக பழைய பேருந்து நிலையம் கடைகள் திறக்கப்பட்டுள்ளன, கீழவாசல் சரபோஜி மார்க்கெட் கடைகளும் ஏலம் விடப்பட்டு திறக்கும் தருவாயில் இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்கு சொந்தமான காமராஜ் மார்க்கெட்டில் 288 கடைகள் கட்டிமுடிக்கப்பட்டு நாளை காலை (11-5-2022) பொது ஏலம் நடத்தப்படும் என்றும் அந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இன்று மாலை 3 மணிக்குள் வரைவோலை( DD) எடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து விட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காமராஜ் மார்க்கெட்டில் ஏற்கனவே கடை வைத்து நடத்திக் கொண்டிருந்த வியாபாரிகள் கடைகளை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியை சார்ந்த தஞ்சையின் முக்கிய பிரமுகரிடம் முறையிட்டதாகவும் அதற்கு அவர் கடைகள் உங்களுக்கே தர ஏற்பாடு செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததாகவும் தெரியவருகிறது இதன் மூலம் பொது ஏலம் நடைபெறுமா என்பது கேள்விக்குறி ஆகியிருக்கிறது ஆனாலும் கூட ஏற்கனவே பல நிகழ்வுகளை நினைவு கொண்டு பார்க்கும்போது பல நேரங்களிலும் ஆணையர் சரவணகுமார் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளுக்கு தடைக் கற்கள் பல வந்திருக்கின்றன என்கிற போதிலும் அவை அனைத்தையும் முறியடித்து அரசுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்து செயல்களில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனாலும் தற்போது ஆளுங்கட்சியான திமுக அனைத்து பொறுப்புகளிலும் வெற்றி பெற்று பதவியில் இருக்கின்ற காரணத்தினால் ,ஆணையர் இந்த நிகழ்விலும் அவர் குறிப்பிட்ட மாதிரியே பொது ஏலம் நடைபெறுமா? அல்லது அரசியல் அழுத்தம் அதிகம் இருப்பதால் பொது ஏலம் தடைபடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
