மாநாடு 22 April 2022
சட்டமன்றத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த எடப்பாடி கே பழனிச்சாமி கூறியதாவது :
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி பேசுகையில் கோடைகாலத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் தற்போது மின் தடை நிலவுகிறது.
சத்தீஸ்கரிலிருந்து தமிழ்நாடு வரை மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது; இந்த அரசு முறையாக மின்சாரத்தை பெறவில்லை. மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது; இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது.தடையில்லா மின்சாரம் கொடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இந்த அரசு?என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் V செந்தில் பாலாஜி, மே மாதத்திற்கான நிலக்கரி தேவைகள் கணக்கிடப்பட்டு 4,80,000 டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
விரைவில் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குஜராத், மஹாராஷ்டிராவில் நிலக்கரி பற்றாக்குறை காரணம் காட்டி மின் தடை அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்தவித தடையுமில்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மின்வெட்டு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால் அதிமுக வெளிநடப்பு செய்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி கே பழனிச்சாமி, தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய தொகுப்பிலிருந்து தேவையான நிலக்கரியை பெறாத காரணத்தினால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டுள்ளது.கடந்த திமுக ஆட்சிக்காலத்திலும் மின்வெட்டு, தற்போதும் மின்வெட்டு.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கோடைகாலத்தில் 17,120 மெகாவாட் மின்சாரம் தடையில்லாமல் கொடுத்தோம்.அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்தியதால் புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு வந்தன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
