மாநாடு 22 April 2022
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்த திமுக தலைவர் ஸ்டாலின் வென்றவுடன் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் எங்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் மகிழும்படியும், ஓட்டு போடாதவர்கள் இவர்களுக்கு ஓட்டு போடாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படும் படியும் எனது தலைமையிலான திமுக அரசு மிகவும் சிறப்பாக செயல்படும் என்றார். இதைக் கேட்ட பொதுமக்கள் அனைவரும் ஏதோ தூய்மையான ஒப்பற்ற ஆட்சியை கொடுப்பதற்காக ஸ்டாலின் முடிவெடத்துவிட்டார் இனி நமக்கெல்லாம் நல்ல காலம் தான் என்று நினைத்திருந்தார்கள் .
ஆனால் இந்த குறுகிய காலத்திலேயே தமிழக மக்களின் நம்பிக்கையை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நாள்தோறும் இழந்து வருகிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது..அதன் ஒரு பகுதியாக திருச்சி மனச்சநல்லூர் அரசு மருத்துவமனை அவலமும் அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் கொடுத்த அறிக்கையையும் வெளிவந்திருக்கிறது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கண்காணிப்பை தீவிரப்படுத்தி, நாள்தோறும் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில், மூன்று நாட்களுக்கு மேலாக அழுகிய நிலையில் கேட்பாரற்று கிடந்த சிவபாக்கியம் என்ற பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
நாள்தோறும் 350க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனையில், அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் இருந்தே அரசு மருத்துவமனைகளின் லட்சணம் தெளிவாகிறது.
10 ஆண்டுகளில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் 10 மாதத்தில் செய்வதாக இந்த அரசு கூறி வரும் நிலையில், சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் மருத்துவமனையின் இந்த நிலையை எண்ணி பார்க்கும்போது அரசின் நிர்வாகம் உண்மையிலேயே செயல்படுகிறதா என மக்கள் மனதில் கேள்வி எழும்புகிறது.
இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கண்காணிப்பை தீவிரப்படுத்தி, நாள்தோறும் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்
