மாநாடு 16 October 2022
கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்நிகழ்வு சென்ற ஆண்டு திருச்சியில் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து 14 வது ஆண்டு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றிருக்கிறது.
தமிழக பண்பாட்டு கண்காட்சியை ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டார்கள். தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரன் மாணவர்கள் சார்பில் தஞ்சாவூரில் நடத்தப்பட்டு வரும் தமிழர்களின் தொன்மை, கலைகள், இசைகள், வீரம் உள்ளிட்ட மூன்று நாட்கள் நடைபெறும் வரலாற்று கண்காட்சி கடந்த 14ஆம் தேதி தொடங்கிய அந்நிகழ்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. தமிழர்களின் தொன்மை, வாழ்க்கை முறைகள், இசைக்கருவிகள், விஞ்ஞான அறிவியல் நுட்பங்கள்,மரபு விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் அடங்கிய கண்காட்சியை காண தஞ்சை மாநகரிலும், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்காணோர் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு சென்றனர்.
இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலக்க வராங்க தமிழ் பசங்க என்ற தலைப்பில் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரி, பான் செக்கர்ஸ் கல்லூரி, பிரிஸ்ட் கல்லூரி,பெரியார் கல்லூரியின் தமிழ் துறை பிரிவு, கும்பகோணம் இதயா கல்லூரி உள்ளிட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பம், நாட்டுப்புற கலைகள் ,கண்ணகி நாடகம், சாதி ஒழிப்பு நாடகம் ,வேளாண்மை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு நாடகம் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம் பெற்றன. பங்கேற்ற மாணவ, மாணவியர்களை வாழ்த்தி தமிழறிஞர் மா.பூங்குன்றன், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன், தமிழக மக்கள் புரட்சி கழகம் தலைவர் அரங்க குணசேகரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பார்வேந்தன், தொப்பி வாப்பா உரிமையாளர் உமர் ஆகியோர் மாணவ, மாணவியர்களுக்கு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
இன்று மூன்றாம் நாள் நிகழ்வாக மொழிகளின் தாய்மொழி தமிழே என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழகப் பெண்கள் செயற்களம் அமைப்பாளர் பூங்குழலி சிவக்கொழுந்து தலைமை வகித்தார். சொல்லாய்வறிஞர், முனைவர் அருளியார் சிறப்புரையாற்றினார். மாலையில் நடைபெற்ற நிகழ்விற்கு தமிழக செயற்களம் மாநில ஒருங்கிணைப்பாளர் இசைமொழி தலைமை வகித்தார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர். பி,ஆர், பாண்டியன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் மணி. செந்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை,திராவிடர் கழக மாவட்ட தலைவர் சி.அமர்சிங்,விசிக மாவட்ட செயலாளர் சொக்கா இரவி உள்ளிட்டார் பங்கேற்று பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார்கள். செள.சாரதா நன்றி கூறினார்.