Spread the love

மாநாடு 04 February 2023

தலைவன் எவ்வழியோ தொண்டரும் அவ்வழி என்பார்களே அதே போல தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளொரு திட்டமும், பொழுதொரு அறிவிப்பும் விட்டுக் கொண்டே இருப்பதைப் போல தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும், அதிகாரிகளும் திமுகவினரும் கூட்டு வைத்துக் கொண்டு எவ்வித வேலையையும் சரிவர செய்வதில்லை என்பதை பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் வாயிலாக சமூக அக்கறை கொண்ட அனைவரும் அறிய முடிகிறது.

எதற்கும் சளைக்காத தஞ்சாவூர், இதற்கும் சலைக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக , தஞ்சாவூர் மாநகராட்சி நாள்தோறும் எதாவது புதுப்புது அறிவிப்பும், அதற்கான விளம்பரங்களும், படங்களும் காட்டியே மக்களை வெறுப்படைய செய்கிறது, தஞ்சாவூர் மாநகராட்சி, அதிலும் எழில் மிகு நகரமாக தஞ்சாவூரை ஆக்குவதாக அறிவித்த நாளிலிருந்து தஞ்சாவூர் நகரப் பகுதி தனது எழில் மிகு அழகை இழந்து வருவதை சமூக ஆர்வலர்களும், தஞ்சாவூர் மக்களும் நன்கு கண்டு வருகிறார்கள்.

செய்வதெல்லாம் வெட்டி வேலை அதற்கு நொட்டை காரணம் என்பார்களே அதேபோல நிகழ்வுகள் தான் தஞ்சாவூரில் பெரும்பாலும் நடைபெற்று வருகிறது, ஆண்டாண்டு காலமாக கடை வைத்து வாழ்ந்து வந்தவர்களை விரட்டி அடித்து விட்டு, அதற்கு காரணமாக சாலை விரிவாக்கம் என்றார்கள், கடைகள் அகற்றப்பட்டு சாலைகள் விரிவடையும் என்று பார்த்தால் சாக்கடை போடப்பட்டு அதன் மீது முன்பு இருந்ததை போலவே ஆனால் தற்காலிக கடைகளும் தள்ளுவண்டிகளும் போடப்பட்டு சாலையை குறுகலாக்கி இருக்கிறது என்பதை பழைய பேருந்து நிலையம் பக்கம் செல்கின்றவர்கள் காண முடியும்.

இதே போல தஞ்சாவூர் மாநகராட்சியில் எந்த ஒரு திட்டத்தையும் சரியாக, முறையாக செய்வதே இல்லை என்பதற்கு பல்வேறு திட்டங்களை மேற்கோள் காட்ட முடியும், தஞ்சாவூர் மாநகரில் பல இடங்களில் சாலைகளில் மேடு பள்ளங்கள்,

பல பகுதிகளில் மேடு பள்ளங்களில் சாலைகள் என்கின்ற நிலை தான் இருந்து கொண்டு வருகிறது, இந்நிலையில் வேலை செய்வதாக சொல்லப்படுகிற இடங்களில் முறைப்படி அறிவிப்புகளும் வைக்கப்படுவதில்லை, சாலைகளில் ஏதாவது வேலை நடந்து கொண்டிருந்தால் மாற்று வழிகளும் செய்யப்படுவதில்லை என செய்திகள் நமக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து சற்று நேரத்துக்கு முன்பாக பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரண்மனை சாலை வழியாக கொண்டி ராஜபாளையம் ரவுண்டானாவை சுற்றி கீழவாசல் வழியாக ஜுபிடர் திரையரங்கத்தோடு ஒரு சிறிய சுற்று சுற்றி பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தோம்.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் சுற்றி வந்ததில் நாம் கண்ட காட்சிகளும், செய்திகளும் பின்வருமாறு: கீழவாசல் ரவுண்டானா இரு பக்க சாலையில் ஒரு பக்க சாலையை அதாவது திருவையாறு பேருந்துகள் செல்லும் சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது ஆனால் அதற்கான அறிவிப்பு அங்கு வைக்கப்படவில்லை, பழைய பேருந்து நிலையத்திற்கு செல்கின்ற போக்குவரத்தும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்ற பேருந்துகளும் எதிரெதிரே ஒரே சாலையில் செல்வதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு அங்கிருக்கும் குண்டு குழியை கடந்து கைக்குழந்தைகளோடு திருவையாறு செல்லும் பேருந்தில் பெண்கள் ஏறுவதை காண முடிந்தது.

கீழவாசல் மார்க்கெட்டிற்கு செல்கின்ற அண்ணா சாலை ஜுபிடர் திரையரங்கம் அருகில் சாலையை துண்டித்து வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது அதற்கான அறிவிப்பு பலகையும் மாற்று வழியில் செல்லக்கூடிய அறிவிப்புகளும் கீழவாசலில் இருந்து வருபவர்களுக்கு வைக்கப்படவில்லை

இதனால் ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள் பணி நடைபெறும் இடம் வரை வந்து திரும்பி செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு திரும்பி செல்வதை காண முடிந்தது, அங்கு சிலரிடம் ஏன் எப்போதுமே இந்த இடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படாமல் இப்படித்தான் இருக்குமா என்று விசாரித்தோம், எப்போதுமே ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் வழியாக இருசக்கர வாகனங்கள் போவதற்கு வழி கொடுக்கப்பட்டிருந்தது ஆனால் அதுவும்

தற்போது கதவு அடைக்கப்பட்டு இருக்கிறது அதனால் தான் இங்கு போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்று கூறினார்கள்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் மக்கள் படும் பாடுகளையும், இத்தனை குறைகளையும், ஏறத்தாழ 1 மணி நேரம் சுற்றி வந்ததிலேயே தெரிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறான அனைத்து குறைபாடுகளும் மாநகராட்சியின் அலட்சியத்தாலும் , சரியான மேற்பார்வை இல்லாததாலும் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது, உண்மை நிலை இவ்வாறு இருக்க

மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பொதுமக்களிடம் குறைகளை கேட்பதாகவும் அதனை தீர்க்கப் போவதாகவும் குறைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டதாகவும், சமூக வலைத்தளங்களில் படங்கள் தொடர்ந்து பதிவிட்டு வருவதை காண முடிகிறது.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் முறையிட செல்லும் பொது மக்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் போய் கூறுங்கள் என்று கைகாட்டி தான் கழண்டு கொள்வதாகவும் கூறப்படுகிறது,

இதையே சாக்காக வைத்துக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் கல்லா கட்டி வருவதாகவும் நமக்குத் தெரிய வருகிறது ,அதனையும், அவர்களையும் ஆதாரங்களோடு விரைவில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளிலும் விற்பனைக்கு வர இருக்கிற அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு, புலனாய்வு மாத இதழில் வெளியிட இருக்கிறோம்.

இந்த நிலையில் தற்போது தஞ்சாவூர் மாநகராட்சி மக்கள் குறைகளை தெரியப்படுத்த புதிய செயலியை வெளியிட்டு இருக்கிறது,

செயலியோடு நின்று விடாமல், செயலில் இறங்கினால் மட்டுமே மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என்பதை தஞ்சாவூர் மாநகராட்சி எப்போது உணரும் .

மாநகராட்சி சாலைகள் எப்படி இருக்கிறது இந்த லிங்கில் வாக்களியுங்கள்: https://pollforall.com/pkx2mwv8

64450cookie-checkதஞ்சாவூரில் ஆணையரும் ,மேயரும் இப்படி இருந்தால், எப்படி கோபத்தில் மக்கள்
110 thoughts on “தஞ்சாவூரில் ஆணையரும் ,மேயரும் இப்படி இருந்தால், எப்படி கோபத்தில் மக்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!