மாநாடு 1 April 2022
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் டெல்லி சென்று இருக்கிறார். இந்த பயணத்தில் இன்று நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் ஏப்ரல் 2-ம் தேதி அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் நடக்க உள்ளது. திமுக சார்பாக திறக்கப்படும் இந்த கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று இருக்கிறார்.இந்த பயணத்தில் பல்வேறு முக்கிய தலைவர்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். அதன்படி பிரதமர் மோடியை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
இந்த நிலையில் டெல்லி சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அங்கு தனி காரை பயன்படுத்தி வருகிறார். அவர் பிரதமரை மட்டும் சந்திக்காமல் பல்வேறு அலுவல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் அவருக்கான தனி கார் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரின் உதவியாளர் மட்டுமே இந்த காரில் அனுமதிக்கப்படுவார். தேவையென்றால் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அரசு நிகழ்வுக்காக செல்லும் முதல்வர் காரில் டெல்லியில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இடம்பெற முடியாது.
இந்த நிலையில்தான் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினும் தற்போது டெல்லி சென்று இருக்கிறார்.அவர் முதல்வர் ஸ்டாலினின் காரில் பயணிக்காமல் தனி காரில் பயணிக்கிறார். இன்று நாடாளுமன்ற திமுக அலுவலகம் சென்ற துர்கா ஸ்டாலின் திரும்பி செல்லும் போது தமிழக அரசிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் காரில் பயணித்தார்.
தமிழக அரசின் சிறப்பு டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் என்பதால் அவரின் காரில் விதிப்படி தேசியக்கொடி இருந்தது.இந்த நிலையில் ஏ.கே.எஸ் விஜயன் காரில் துர்கா ஸ்டாலின் ஏறி அமர்ந்தார். அவரை தொடர்ந்து முன் சீட்டில் ஏ.கே.எஸ்.விஜயனும் அமர்ந்தார். காரை சுற்றி பாதுகாப்பிற்கு அதிகாரிகள் நின்றிருந்தனர்.காரில் துர்கா ஸ்டாலின் அமர்ந்ததும் சட்டென அதிகாரி ஒருவர் காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.
துர்கா ஸ்டாலின் இருந்த காருக்கு முன் வந்தவர் அதில் இருந்த தேசிய கொடியை சட்டென நீக்கினார்.தமிழக அரசிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் கார் என்பதால் அவரின் காரில் தேசிய கொடி இருக்கலாம். ஆனால் கார் உள்ளே அரசு நிர்வாகத்தை சேராத ஒருவர் பயணிப்பதால் விதிப்படி தேசிய கொடி இருக்க கூடாது. இதனால் உடனையாக காரில் இருந்து தேசிய கொடியை அகற்றிய அதிகாரி காரில் இருந்த தேசிய கொடியை மரியாதையுடன் சுருட்டி வைத்தார். அதன் பிறகே அந்த கார் புறப்பட்டது. டெல்லியில் திமுகவின் புதிய அலுவலகம் நாளை ஏப்ரல் 2ம் தேதி திறக்கப்பட உள்ளது. அதில் திமுக நிர்வாகிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இது முக்கியமான நிகழ்வு என்பதால் முதல்வர் ஸ்டாலினுடன் துர்கா ஸ்டாலினும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.